வெளியுறவுத்துறை அறிக்கை
Vladimir Putin's India Visit 2025 : விளாடிமிர் புதின் இந்தியா வருகைக்கு இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 23-வது இந்தியா - ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக அரசு முறைப் பயணமாக டிச. 4ல் இந்தியா வருகிறார்.
4 ஆண்டுகளுக்கு பிறகு வருகை
டிச.5-ம் தேதி வரை அவரது பயணம் இருக்கும். இந்த பயணத்தின்போது, அதிபர் புதின், பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். ரஷ்ய அதிபர் புதினை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வரவேற்று அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்தளிக்கிறார்.
உலகளாவிய பிரச்சினை கருத்து பரிமாற்றம்
இந்த அரசுமுறைப் பயணம், இருதரப்பு உறவுகளில் நிலவும் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யவும், சிறப்பான, சலுகையுடன் கூடிய இருதரப்பு மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான தொலைநோக்குப் பார்வையை முன்வைக்கவும், பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளவும் இந்திய மற்றும் ரஷ்ய தலைமைக்கு வாய்ப்பாகும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதினின் வருகை முக்கியத்துவம் வாய்ந்தது
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், விளாடிமிர் புதினின் இந்திய வருகை மிகவும் முக்கியத்துவும் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
இந்த மோதல் விரைவாக முடிவுக்கு வர வேண்டும் என தெரிவித்திருந்த பிரதமர் மோடி, இது போருக்கான நேரம் அல்ல என கூறி இருந்தார்.
ரஷ்யா - உக்ரைன் போர் குறித்து மோடி பேசுவார்
ரஷ்ய அதிபர் புதினை மாஸ்கோவில் சந்தித்து இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, உக்ரைன் தலைநகர் கீவ் சென்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்து சமரச முயற்சிகளை மேற்கொண்டார். இவ்விஷயத்தில் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் நம்பிக்கைக்கு உரிய உலகத் தலைவராக மோடி கருதப்படுகிறார்.
எனவே, இந்தியா வரும் புதினுடன் உக்ரைன் விவகாரம் குறித்தும் பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செர்ஜி லாவ்ரோவ் கருத்து
முன்னதாக, விளாடிமிர் புதினின் இந்திய வருகை குறித்து கருத்து தெரிவித்திருந்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டிசம்பரில் இந்தியாவுக்கு வருகை தருவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. ராணுவ ஒத்துழைப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம், நிதி, மனிதாபிமான உதவி, சுகாதாரம் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற உயர்தொழில்நுட்ப துறைகளில் இணைந்து பணியாற்றுவதற்கான திட்டங்கள் இந்த சந்திப்பின்போது முன்னெடுக்கப்படும்.
பொருளாதார உறவு வலுப்பெறும்
இந்தியா தனது வர்த்தக உறவுகள் குறித்த முடிவுகளை சுயமாக மேற்கொண்டு வருகிறது. ரஷ்யாவுடனான வர்த்தக உறவுகளில் இந்தியா முற்றிலும் திறமையான வகையில் முடிவுகளை எடுத்து வருகிறது. இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மை அமெரிக்காவால் அச்சுறுத்தலுக்கு ஆளாகவில்லை. ஏனெனில், இந்தியா எந்த அழுத்தத்துக்கும் அடிபணியாமல் தனது சொந்த விருப்பப்படி சர்வதேச கூட்டாளர்களை தேர்ந்தெடுக்கிறது.
இந்தியாவை ஆதரிக்கும் புதின்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறுவதற்கான பிரேசில், இந்தியாவின் முயற்சியை ரஷ்யா ஆதரிக்கிறது. தற்போது மாறிவரும் உலகளாவிய நிலவரங்களுக்கு ஏற்ப ஐநா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்பதே ரஷ்யாவின் நிலைப்பாடு.” என தெரிவித்திருந்தார்.
கடந்த 2021-ம் ஆண்டு டிச. 6ம் தேதி இந்தியா - ரஷ்யா ஆண்டு உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த விளாடிமிர் புதின், அதன் பிறகு இந்தியா வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது என்று தெரியவந்துள்ளது.