ஈரான் - இஸ்ரேல், அமெரிக்க போர்
US Iran Israel War : ஈரான்- இஸ்ரேல் அமெரிக்கா இடையேயான போர் ஒரு மாதத்தைக் கடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் இப்போது புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்திருந்தது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
"ஈரான் உடன்படிக்கைக்கு வரத் தவறினால், அந்த நாட்டை கற்காலத்திற்கே அனுப்பி வைப்போம்" என அமெரிக்க அதிபர் அதிபர் டிரம்ப் விடுத்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானைத் தீவிரமாகத் தாக்கி வருகின்றன.
தரைமட்டமான ஈரானின் மாபெரும் பாலம்
இந்த மோதலின் ஒரு பகுதியாக, ஈரான் நாட்டின் கரஜ் நகரை தலைநகர் தெஹ்ரானுடன் இணைக்கும் மிக முக்கியமான பாலத்தை அமெரிக்கப் படைகள் குண்டுவீசி அழித்துள்ளன.
டிரம்ப் வெளியிட்ட வீடியோ
இது குறித்த வீடியோவை வெளியிட்ட அதிபர் டிரம்ப், "ஈரானின் மிகப்பெரிய பாலம் இடிந்து விழுந்துவிட்டது, இனி அது ஒருபோதும் பயன்பாட்டுக்கு வராது.
ஈரானில் எஞ்சியிருக்கும் அனைத்தும் அழிவதற்கு முன்பாக, ஈரான் ஒப்பந்தம் செய்துகொள்வதற்கான நேரம் இது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அதிரடிப் பதிலடித் திட்டம்
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலால் கடும் கோபமடைந்துள்ள ஈரான், இதற்குப் பழிவாங்கும் விதமாக வளைகுடா நாடுகளில் உள்ள 8 முக்கியப் பாலங்களைத் தாக்கி அழிக்கப்போவதாகப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஈரான் குறிப்பிட்டுள்ள பாலங்களின் பட்டியல்
ஈரானின் வெளியிட்டுள்ள பட்டியலில் குவைத்தின் ஷேக் ஜாபர் அல்-அஹ்மத் அல்-சபா கடல் பாலம். ஐக்கிய அரபு அமீரகத்தின் ஷேக் ஸாயித் பாலம், அல் மக்தா பாலம் மற்றும் ஷேக் கலீஃபா பாலம்.
சவுதி அரேபியா மற்றும் பஹ்ரைனின் கிங் ஃபஹத் காஸ்வே பாலம். ஜோர்டானின் கிங் ஹுசைன் பாலம், டாமியா பாலம் மற்றும் அப்துன் பாலம் ஆகியவை உள்ளன.
போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன
ஈரானின் இந்த வெளிப்படையான மிரட்டலால் மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் பெரும் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளன. மேலும் பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் ஈரான் அடுத்தகட்ட நகர்வுகளைத் திட்டமிட்டு வருவதால், அந்தப் பிராந்தியத்தில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளன.