

ஜோஹோவின் அரட்டை
ZOHO Arattai App End to End Encryption : வாட்ஸ்அப்பிற்கு போட்டியாக தற்போது ஜோஹோ நிறுவனத்தின் அரட்டை செயலி மக்களால் அதிக பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது.
2021ல் அறிமுகமானாலும், ஆரம்பத்தில் சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 300 டவுன்லோடு மட்டுமே ஆனது. தற்போது இச்செயலி பற்றி பலருக்கும் தெரியவந்த நிலையில், திடீரென பயனர்களின் எண்ணிக்கை உச்சம் தொட்டு, மத்திய அமைச்சர்களின் பரிந்துரை மற்றும் இந்தியாவில் உருவாக்கப்பட்டது போன்ற காரணங்களால் தற்போது 1 கோடி பதிவிறக்கங்களை தாண்டி, இந்தியாவில் 'டாப் ரேங்க்'ல் உள்ள செயலிகளில் ஒன்றாக உயர்ந்துள்ளது.
என்ட் டு எண்ட் என்க்ரிப்சன்
வாட்ஸ்அப், டெலிகிராம் போன்ற செயலிகளை முந்தி, ஆப்பிளின் ஆப் ஸ்டோர், ஆண்ட்ராய்டின் ஆப் ஸ்டோர்களில் முன்னணி இடங்களை பிடித்துள்ளது. இந்தியர்கள் மத்தியில் பிரபலமான இந்த செயலியில் ' என்ட் டு எண்ட் என்க்ரிப்சன்' (இதன் மூலம் செயலியில் அனுப்பப்படும் தகவல்களை அனுப்புபவரும், பெறுபவரும் மட்டுமே பார்க்க முடியும். சம்பந்தப்பட்ட நிறுவனம் கூட பார்க்க முடியாது. )எனப்படும் அம்சம் இல்லாமல் இருந்தது. இதனை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக அந்த செயலியை உருவாக்கிய ஜோஹோ நிறுவனம் அறிவித்து இருந்தது.
ஸ்ரீதர் வேம்பு பதிவு
இது குறித்து பயனர்கள் எதிர்பார்த்து காத்திருந்தநிலையில் ஜோஹோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: நாங்கள் ' என்ட் டு எண்ட் என்க்ரிப்டட்க்கு( e2ee) என ஒரு டேப்(tab) வழங்குகிறோம். இதனை பயனர்கள் . தங்களது தனிப்பட்ட தகவல் பரிமாற்றத்துக்கு டீஃபால்ட் ஆக பயன்படுத்திக் கொள்ளலாம். குரூப் சேட்களுக்கும் விரைவில் வழங்க உள்ளோம். இதில் உங்களது ஆலோசனை தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.
e2ee குறித்து ஆலோசனை
வாய்ப்பு 1: எந்தவொரு பயனும் நேரடி தகவல் பரிமாற்றங்கள் அனைத்துக்கும் 'e2ee' ஐ டீஃபால்ட் ஆக மாற்றிக் கொள்ளலாம். அல்லது e2ee பயன்முறையில் ஒரு குறிப்பிட்ட தகவல் மாற்றத்துக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். பயனரில் ஒருவர் e2ee ஐ அமைத்து இருந்தாலும், மற்ற பயனர் அதனை அமைக்காவிட்டாலும் கூட பயன்பாடு e2eeக்குச் செல்லும் வாய்ப்பு 2அரட்டை கணினி முழுவதும் e2ee U டீஃபால்ட் ஆக மாற்றுவது குறித்தும் நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.
இது நேரடி தகவல் பரிமாற்றங்களுக்கு மட்டுமே கிடைக்கும். குழு பயன்பாட்டில் பின்னர் கொண்டு வருவோம். சிலர் தங்கள் தகவல் பரிமாற்றத்தை கிளவுட் அடிப்படையிலான பரிமாற்றத்தை விரும்புகின்றனர். எனவே நாங்கள் முதலாவது வாய்ப்பை பற்றி யோசித்து வருகிறோம். ஆனால், 2வது விருப்பத்தை ஏற்றுக் கொள்ளலாம். இது எங்களுக்கு மலிவானது. இவ்வாறு அந்த பதிவில் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.
விரைவில் அறிமுகப்படுத்தப்படும்
இதன் மூலம் என்ட் டு எண்ட் என்க்ரிப்சன் அம்சம் விரைவில் அரட்டை செயலியிலும் வர உள்ளதை ஸ்ரீதர் வேம்பு உறுதிப்படுத்தி உள்ளார். இந்த அம்சம் ஏற்கனவே வாட்ஸ் அப் செயலியில் உள்ள நிலையில் விரைவில் அரட்டை செயலியிலும் அறிமுகமாக உள்ளது என்பது அரட்டை பயனாளர்களுக்க ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பாக அமைந்துள்ளது.