

ரவிமோகன் - ஆர்த்தி விவாகரத்து விவகாரம்
பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தனர்.
நீதிமன்றத்தை நாடிய ரவி மோகன் - ஆர்த்தி ரவி
இதனைத் தொடர்ந்து, தங்களது திருமணப் பதிவை ரத்து செய்து விவாகரத்து வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரவிமோகன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த விவாகரத்து வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
நீதிமன்ற உத்தரவு வரும்வரை
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இறுதித் தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அவதூறாகப் பேசவோ அல்லது தனிப்பட்ட விமர்சனங்களில் ஈடுபடவோ கூடாது என்று உத்தரவிட்டிருந்தது.
தொடரும் குற்றச்சாட்டுகளும் இடைக்காலத் தடையும்
இதற்கிடையில், ஜெயம் ரவியின் தோழியான கெனிஷா பிரான்சிஸ், ஆர்த்தி ரவி குறித்து அவதூறான கருத்துகளைப் பகிர்ந்ததாகக் கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சமூக ஊடகங்கள் உட்பட எந்தவொரு ஊடகத்திலும் ஆர்த்தி ரவிக்கு எதிராக கெனிஷா கருத்து தெரிவிக்கக் கூடாது என நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது.
கெனிஷாவின் இன்ஸ்டா பதிவு
இந்தச் சூழலில், அப்பா, அம்மா, குழந்தையை இழந்த நான் ரவி மோகனின் குடும்பத்தை கெடுப்பேனா? ரவி மோகன் ஒன்றும் குழந்தை இல்லை. சுயமாக முடிவு எடுக்கக்கூடியவர். பிறகு என்னை ஏன் இழுக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் "ஆன்லைன் விமர்சனங்கள் மற்றும் சூழ்ச்சிகளால் நான் சோர்வடைந்துவிட்டேன்" என்று குறிப்பிட்டு கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஜெயம் ரவியின் ஆதங்கப் பேச்சு
இந்நிலையில், நடிகர் ரவிமோகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது மிகவும் உருக்கமாகப் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
என்னை சீண்டிப் பார்க்க வேண்டாம்
அப்போது அவர் பேசும்போது "என்னுடைய பிள்ளைகளை என்னைப் பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்கள். என்னை மேலும் சீண்டிப் பார்க்க வேண்டாம், இனி நான் அமைதியாக இருக்கப் போவதில்லை.
எனக்கு ஏற்பட்ட அவமானங்களைத் தாங்க முடியாமல் இப்போது என்னை நானே வருத்திக்கொள்ளத் தொடங்கிவிட்டேன்.
விவாகரத்து கிடைக்கும் வரை நடிக்க மாட்டேன்
விவாகரத்து கிடைக்கும் வரை இனி புதிய படங்களில் நடிக்கப் போவதில்லை; நான் நடித்த படங்களையும் வெளியிடப் போவதில்லை. நான் உயிரோடு இருக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் எண்ணம்.
ஆதரவாக நின்றவர் கெனிஷா மட்டும்தான்
மேலும், ஒரு குறிப்பிட்ட நடிகை தனது வாழ்க்கையைக் கெடுத்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், கஷ்டம் வரும் போதுதான் நல்ல நண்பர்கள் யார் என்று தெரியும் என்றும், தனக்கு ஆதரவாக நின்றவர் கெனிஷா மட்டும்தான்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆர்த்தியின் பதிலடிப் பதிவு
ஜெயம் ரவியின் பேச்சைத் தொடர்ந்து, அவரது மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிலை வெளியிட்டுள்ளார்.
ஆர்த்தி ரவியின் இன்ஸ்டா பதிவு
அதில், "தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை எழுப்பாதீர்கள். என்னுடைய அமைதியை எப்போதும் பலவீனமாகக் கருத வேண்டாம். அதைப் பயன்படுத்தி யாரும் அநியாயமாக நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டாம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகையே எதிர்கொள்ள தயார்
மேலும், தனது குழந்தைகளையும் தனது கண்ணியத்தையும் காப்பாற்ற வேண்டிய சூழல் வந்தால், தான் இந்த உலகத்தையே எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
ஆர்த்தி ரவிக்கு குஷ்பு ஆதரவு
இறுதியில் எப்போதும் உண்மையே வெல்லும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். ஆர்த்தி ரவியின் இந்த பதிவிற்கு நடிகை குஷ்பு சுந்தர் கமெண்ட் மூலம் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
தற்போது ரவி மோகன், ஆர்த்தி ரவி என இரு தரப்பிலும் மாறி மாறி வெளியாகும் இந்த கருத்துக்கள் இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
=====