
Uttarakhand Cloudburst 2025 : உத்தரகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டம் ஹர்சில்-தாராலி பகுதியில், கீர் கங்கை (Kheer Ganga) ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இந்த திடீர் மேக வெடிப்பால், கீர் கங்கை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, அருகிலுள்ள கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் சுமார் 20 முதல் 25-க்கும் மேற்பட்ட உணவகங்கள், தங்கும் விடுதிகள் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் பலர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போயிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்தநிலையில் தகவல் அறிந்து, மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடியாக மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.மாநிலப் பேரிடர் மீட்புப் படை (SDRF), தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF), இந்திய ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை (ITBP) ஆகிய பல குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. உத்தரகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, இந்த துயர நிகழ்வு குறித்து தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : ஜம்மு - காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்
மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதலமைச்சருடன் தொலைபேசியில் பேசி, தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
வெள்ளப்பெருக்கு காரணமாக பெரும்பாலான இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டதால், மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.