

கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
Sabarimala Devaswom Board Announcement : கேரள உயர்நீதிமன்ற உத்தரவின்படி, சபரிமலையில் நடப்பு சீசனில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரியும் சர்ச்சகர்கள் முதல் பக்தர்கள் வரை பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பிப்பு
இந்தஆண்டு தரிசனத்திற்கு பக்தர்கள் கூட்டம் நாள்தோறும் அதிகரித்தும், பாதியிலேயே பயணத்தை முடித்து திரும்பும் நிலையும் ஏற்பட்டுள்ளது. தங்களது சிரமங்களை தெரிவித்த பக்தர்களின் கோரிக்கைக்கு, கேரள உயர்நீதிமன்றம் கோவில் நிர்வாகத்திற்கு சில நிபந்தனைகளைளுடன், முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டு உத்தரவிட்டது.
போட்டோ எடுக்க தடை
இந்நிலையில், சபரிமலை சன்னிதான திருமுற்றத்தில், பக்தர்கள் தங்கள் மொபைல் போன்களில் போட்டோ எடுக்க தடை செய்யப்பட்டுள்ளது என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்களின் மொபைல் போன் பறிமுதல் செய்யப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செய்தியாளர்களுக்கும் இங்கு கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே செய்தியாளர்கள் திருமுற்றத்தில் போட்டோ எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
படியேறும் முன் இறுமுடியை கீழே இறக்க வேண்டும்
மேலும் பக்தர்கள், அய்யப்பன் சிலைகளை இருமுடி கட்டுடன் கொண்டு வந்து, அய்யப்பனை தரிசனம் நடத்திய பின், ஊருக்கு கொண்டு செல்வது வழக்கம். தற்போது இதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. படியேறும் முன் அதை எங்காவது வைத்துவிட்டு, அய்யப்பனை தரிசித்து திரும்பி போகும் போது எடுத்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆடைகள் எடுப்பதற்கு கூடுதல் ஊழியர்கள் நியமனம்
பம்பை நதியில் பக்தர்கள் களையும் ஆடைகளை எடுப்பதற்கு குத்தகை விடப்பட்டு இருந்தது. ஆனால் நதியில் குவியும் ஆடைகளை அள்ளுவது சிரமமாக உள்ளது.
எனவே, கேரள உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இதற்காக கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படுவர் என்றும், 15 ஊழியர்கள் பம்பை நதிக்கரையில் ஒவ்வொரு 750 மீட்டர் இடைவெளியில் நின்று, தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டுக்கொண்டிருப்பர் என்றும் தேவசம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.