அனிதா நினைவேந்தல்..ஆதவ் அர்ஜுனா விட்ட வார்த்தை? சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் காரசார விவாதம்!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே காரசார விவாதம்.
Anitha's Remembrance Day
Anitha's Remembrance Daysource: google,ai
2 min read

அனிதாவின் நினைவு நாள்

நீட் தேர்வுக்கு எதிராகப் போராடி உயிர் நீத்த அரியலூர் மாணவி அனிதாவின் 9-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (செப்டம்பர் 1), தமிழக சட்டமன்றத்தில் அவரது தியாகம் மற்றும் நீட் தேர்வு எதிர்ப்பு குறித்த காரசார விவாதங்கள் நடைபெற்றன.

சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆற்றிய உரை

அமைச்சரவையில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்து உச்சநீதிமன்றம் வரை போராடிய அனிதாவின் நினைவைப் போற்றினார்.

நீட் எதிர்ப்பு தீர்மானங்கள்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தற்போதைய முதல்வர் விஜய் என 3 முதல்வர்கள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியும் ஒன்றிய அரசு செவிசாய்க்கவில்லை என்று குறிப்பிட்டார்.

வருங்கால அரசியல் மாற்றம்

"2029 தேர்தல் சூழல்கள் மாறும்போது, இந்த சட்டமன்றத்தில் ஒலித்த முதல் குரலான நீட் தேர்வு பாராளுமன்றத்தில் தூக்கி எறியப்பட்டு ஒழிக்கப்படும். அன்றைய நாளில் அனிதாவின் கண்ணீருக்குப் பதில் கிடைக்கும்" என்றும் மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலும் பேசினார்.

நினைவேந்தல் கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு?

இதைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் அனிதாவின் குடும்பத்தினர் மற்றும் தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பு சார்பில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த அமைதியான நினைவேந்தல் நிகழ்வுக்கு காவல்துறை அனுமதி மறுத்ததைக் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி

15 நாட்களுக்கு முன்பே அனுமதி கோரப்பட்டும், இது ஆர்ப்பாட்டம் எனக் கூறி காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக அனிதாவின் சகோதரர் மணிரத்னம் தம்மிடம் தெரிவித்ததாகக் கூறிய உதயநிதி, நீட் எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட இந்த அரசு, ஜனநாயக ரீதியிலான நினைவேந்தலுக்கு ஏன் அனுமதி அளிக்கவில்லை எனக் கேள்வி எழுப்பினார்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

பெசன்ட் நகர் வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா மற்றும் எல்லையம்மன் கோயில் திருவிழாக்கள் நடைபெற்று வருவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம்-ஒழுங்குப் பிரச்னையைக் கருத்தில் கொண்டே அனுமதி மறுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மேலும், "அனிதாவின் நினைவேந்தலில் அரசியல் பேசாமல் அனைவரும் ஒரே குரலாக நிற்போம்" எனக் குறிப்பிட்டார். இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தலையீடு

"அனுமதி மறுப்புக்கான காரணத்தை கூறிவிட்டீர்கள்; மாற்று இடம் கேட்டால் வழங்க அரசு தயார் என்பதோடு விவாதத்தை முடித்துக் கொள்ளுங்கள்" என சபாநாயகர் அறிவுறுத்தினார்.

"அரசியல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை" — உதயநிதி ஸ்டாலின்

சபாநாயகரின் தலையீட்டிற்குப் பின் பேசிய உதயநிதி ஸ்டாலின்,இதை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. வேளாங்கண்ணி மாதா கோயில் கொடியேற்றம் கடந்த வாரமே முடிந்துவிட்டது.

அடுத்தடுத்த நிகழ்வுகள் செப்டம்பர் 7, 8 தேதிகளில்தான் வரவுள்ளன. இன்று அங்கு பெரியளவில் கூட்ட நெரிசல் எதுவுமில்லை. எனவே, நினைவேந்தல் நிகழ்வை இன்றே நடத்துவதற்கு உரிய இடத்திற்கு அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். என்றார்.

இதனை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முதலமைச்சரின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு சென்று மாற்று இடத்தில் நினைவேந்தல் நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in