

நயினார் நாகேந்திரன் நடைபயணம்
Nainar Nagendran on DMK Government : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழர்கள் தலை நிமிர தமிழனின் பயணம் என்று தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில், தனது சமூக வலைதளத்தில் அறிக்கைகள் வெளியிட்டும் செய்தியாளர்களை சந்தித்து அரசியல் கருத்துகளை பகிர்ந்து வருகிறார்.
திமுக அரசுக்கு பதிலடி
இந்நிலையில், திமுகவின் ஆட்சி அவலங்களை தொடர்ந்து சுட்டிக்காட்டி மக்களுக்கு தெரியப்படுத்தி வரும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்கொள்முதல் பிரச்சனை மற்றும் கோவை பாலியல் வன்கொடுமை குறித்து பேசியும், பதிவிட்டும் திமுக அரசிற்கு கண்டனங்களை பதிவிட்டு, விமர்சித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் எக்ஸ் பதிவு
அதன் ஒரு பகுதியாக தனது எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், நாமக்கல்லில் குளிரூட்டப்பட்ட முட்டை சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும் என்று சொன்னீங்களே, செஞ்சீங்களா முதல்-அமைச்சரே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக அரசின் நிர்வாக லட்சணம்
மேலும், கடந்த நான்கரை ஆண்டுகளாகத் தொழில்வரி உயர்வு, விலைவாசி உயர்வு, மின்சாரக் கட்டண உயர்வு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்டத்தின் கோழிப்பண்ணை மற்றும் முட்டை உற்பத்தியை மீட்டெடுக்கவும், அத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உங்கள் அரசு என்ன செய்தது என்றும் முட்டை உற்பத்தி உச்சத்தை அடைந்த போதிலும் கடும் வெப்பநிலை காரணமாக முட்டைகள் சேதமடைந்து, ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதே இதுதான் திமுக அரசின் நிர்வாக லட்சணமா என்றும் விமர்சித்துள்ளார்.
உள்ளூர் உற்பத்தியை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு செல்லும் முதல்வர்
டெல்டா மாவட்டங்களில் நெல் மூட்டைகள் முளைப்பு கட்டி வீணாகின்றன, கொங்கு மாவட்டங்களில் முட்டைகள் அழுகிப்போகின்றன. உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிப்பதை விட்டுவிட்டு முதலீடுகளை ஈர்க்க நீங்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதில் யாருக்கு என்ன பயன் உள்ளிட்ட விமர்சனங்களை எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.