

தடையின்றி சிக்கன் விற்பனை நடைபெறும்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கவிருந்த 60,000 கறிக்கோழி கடைகளின் வேலைநிறுத்தப் போராட்டம் அதிகாரப்பூர்வமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
ஒருங்கிணைப்புக் குழு அளித்த உறுதியைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதால், வழக்கம் போலத் தடையின்றி சிக்கன் விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் தஞ்சாவூரில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தவறான நடைமுறைகளைக் கண்டித்துக் கடைகளை அடைக்க முடிவெடுக்கப்பட்டிருந்தது.
போராட்டம் மற்றும் வர்த்தக பாதிப்புத் தகவல்கள்
தமிழ்நாட்டில் தினமும் சுமார் 6 லட்சம் கோழிக்குஞ்சுகள் வளர்க்கப்பட்டு, நாளொன்றுக்கு 12 லட்சம் கிலோ (1,200 டன்) கறிக்கோழி இறைச்சி உற்பத்தியாகிறது.
ஒரு மாதத்திற்கு 1.80 கோடி கோழிக்குஞ்சுகள் மூலம் 15.50 கோடி கிலோ இறைச்சி சந்தைக்கு வருகிறது.
கறிக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தால், நாளொன்றுக்கு ரூ. 30 கோடி மதிப்பிலான வர்த்தகமும் பணப்புழக்கமும் முடங்கும் அபாயம் நிலவியது.
கோழி வணிகர்களின் முக்கியக் கோரிக்கை என்ன?
விற்பனைக்கு அனுப்பப்படும் கோழிகளுக்கு, லாரிகளில் ஏற்றுவதற்கு 12 மணி நேரத்திற்கு முன்பாகவே தீவனம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பதே வணிகர்களின் முதன்மையான கோரிக்கையாகும்.
வணிகர்கள் சுட்டிக்காட்டும் பிரச்சனைகள்
கோழி உற்பத்தியாளர்கள் செயற்கையாக எடையைக் கூட்டுவதற்காகக் கோழிகளுக்குக் கழுத்து வரை தீவனத்தையும் தண்ணீரையும் திணிக்கின்றனர். இதனால் ஒரு கோழியில் 100 முதல் 200 கிராம் வரை செரிக்காத கழிவுகளுக்கே பொதுமக்கள் பணம் செலுத்த வேண்டியுள்ளது.
கடைகளில் கோழியை வெட்டும்போது இந்தச் செரிக்காத தீவனக் கழிவுகள் இறைச்சியில் சிந்தி, அதன் தரத்தைக் கெடுக்கிறது.
கழுத்து வரை தீவனம் அடைக்கப்பட்டு வாகனங்களில் ஏற்றி வரப்படும்போது, வெயில் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக வழியிலேயே நூற்றுக்கணக்கான கோழிகள் இறந்து வணிகர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன.
சுகாதார சிக்கல்கள் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை
கோழியின் வயிற்றில் செரிக்காத உணவு நீண்ட நேரம் இருக்கும் நிலையில், பிரயானத்தின் போது ஏற்படும் வெப்பத்தால் பாக்டீரியாக்கள் வேகமாகப் பெருகக்கூடும். இதனால் கோழியை வெட்டுவதற்கு முன்பே இறைச்சியில் கிருமிகள் பரவ வாய்ப்புள்ளது.
இத்தகைய இறைச்சியை உட்கொள்வது உணவு நச்சுத்தன்மை மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற சுகாதாரக் கேடுகளுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பொதுமக்களுக்கு ஏற்படவிருந்த பாதிப்புகள்
சிக்கன் சப்ளை நிறுத்தப்பட்டிருந்தால், ஆட்டுக்கறி, மீன் மற்றும் முட்டைகளுக்கான தேவை அதிகரித்து அவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்திருக்கும்.
உணவகங்கள் மற்றும் தள்ளுவண்டி கடைகளில் 60% வியாபாரம் கோழி இறைச்சியை நம்பியே உள்ளதால், சிறு தொழிலாளர்களும் கேட்டரிங் அமைப்பாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
வாபஸ் பெறப்பட்டதன் பின்னணி
பொதுமக்கள் மற்றும் உணவகங்களின் நலனைக் கருத்தில் கொண்டும், கோழி உற்பத்தி நிறுவனங்கள் தீவனக் கட்டுப்பாட்டு விதிமுறைகளைச் செயல்படுத்தச் சம்மதம் தெரிவித்ததாலும் இந்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்படுவதாக தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
=====