

கோவை பாலியல் வன்கொடுமை சம்பவம்
Coimbatore College Girl Gang Rape Case Update : கோவை விமான நிலையம் அருகே பிருந்தாவன் நகர் பகுதியில் இரவு 10 மணியளவில் கல்லூரி மாணவி தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். ஆள் நடமாட்டமற்ற அப்பகுதிக்கு அப்போது வந்த 3 பேர் கொண்ட கும்பல் காரில் இருந்த கல்லூரி மாணவியின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கியுள்ளது.இதனால் அந்த ஆண் மயக்கமடைந்த நிலையில், 3 பேர் கொண்ட கும்பல் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.
தப்பியோடிய 3 பேர் கொண்ட கும்பல்
பின்னர் மயக்கம் தெளிந்த அந்த ஆண் நண்பர், காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அப்பகுதியை சோதனை செய்தபோது, முற்புதர் அருகில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கவலைக்கிடமான நிலையில் இருந்த அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், வழக்கு பதிவு செய்யப்பட்டு தப்பியோடிய 3 பேர் கொண்ட கும்பலை காவல் துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில், கோவையில் நடந்தேறிய இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின், அந்த 3 குற்றவாளிகளை சுட்டுப்பிடித்துள்ளனர்.
கோவை மாநகர காவல் ஆணையர் விளக்கம்
இந்த குற்றசம்பவம் குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை விமான நிலைய சுவருக்கு பின்னால் இந்த சம்பவம் நடந்துள்ளது. கார் கண்ணாடியை உடைத்து, ஆண் நண்பரை தாக்கிவிட்டு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 3 பேரும் மது அருந்திவிட்டு இந்த குற்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமை சம்பவம் திட்டமிட்டு நடந்ததாக தெரியவில்லை.
300 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததால் சிக்கினர்
பாலியல் வழக்கில் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடினோம். சில ரகசிய தகவலில் அடிப்படையில் மூன்று குற்றவாளிகளையும் அடையாளம் கண்டோம். பொதுமக்கள் வைத்த பல சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யவில்லை. வழக்கில் 300 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து 3 பேரையும் அடையாளம் கண்டோம்.
நேற்றிரவு சுமார் 11 மணி அளவில் குற்றவாளிகள் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் சதீஷ், கார்த்தி ஆகியோர் சகோதரர்கள். குணா என்பவர் அவர்களது உறவினர். மூவர் மீதும் கொலை வழக்கு உள்ளது. மூவரும் அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் கிடையாது. மூவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளோம்.
அவசர நிலைக்கு காவலன் செயலியை பயன்படுத்துங்க
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவியின் உடல்நிலை சீராக உள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு உளவியல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவசர காலங்களில் காவலன் மொபைல் செயலியை பயன்படுத்த வேண்டும். குற்ற சம்பவம் குறித்து தகவல் சொல்ல கூட நேரமில்லாத நேரங்களில், காவலன் செயலியில் உள்ள SOS பட்டனை அழுத்தினால் சம்பவ இடத்தை காவல்துறை எளிதாக கண்டறிய முடியும். சம்பவம் தொடர்பாக அவதூறு கருத்துகளை பரப்ப வேண்டாம் என்று கேட்டுகொண்டார்.