
பட்டாசு வெடிக்க அவகாசம்
Diwali Festival 2025 Celebrations in Tamil Nadu : தீபாவளி தினத்தன்று பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு வெடிக்கும் நேரம் தமிழக அரசால் அறிவிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டு இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு அறிவிப்பு
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும்காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
பசுமை பட்டாசுகள் உபயோகிப்பு
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2018 உத்தரவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 2018-ஆம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலிஎழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.
இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்கலாம்
இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை(Diwali Crackers Bursting Time in Tamil Nadu) மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் அவகாசம் 5 நாட்கள்
தமிழகம் மற்றும் டெல்லியை ஒப்பிட்டு பார்க்கையில் அங்கு மக்கள் தொகை மற்றும், காற்று மாசுபடு மிக அதிகம். அதன்படி, அங்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி தினத்தன்று வெடி வெடிக்க நேரம் வழங்கப்படும். அதன்படி இந்த ஆண்டு அங்கு 5 நாட்கள் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி பென்ஞ் அமர்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் நேரம் கோரும் மக்கள்
இந்நிலையில், தமிழகத்தில் காலை, மாலை என 2 மணி நேரம் மட்டும் வழங்கியுள்ளது குறித்து தமிழக மக்கள் தீபாவளியில் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுறும் நேரத்தை அரசு குறைத்து வருவதாக விமர்சித்து வரும் நிலையில், டெல்லியில் பட்டாசு வெடிக்க வழங்கப்பட்டுள்ள நேரம் குறித்தும் கிசுகிசுத்து வருகின்றனர்.