

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் வெளியிட்ட "மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்" அறிவிப்பிற்கு பிரபல நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார் தனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.
110 விதியின் கீழ் முதல்வர் விஜய் அறிவிப்பு: மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்
தமிழக இளைஞர்களிடையே மோட்டார் பந்தயங்கள் மீது அதிகரித்து வரும் ஆர்வத்தைக் கருத்தில் கொண்டும், விளையாட்டுச் சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் புதிய "மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்" உருவாக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார்.
ஃபார்முலா 1, ஃபார்முலா 2, ஃபார்முலா 3 மற்றும் ஃபார்முலா 4 உள்ளிட்ட பன்னாட்டுப் பந்தயங்களை நடத்தும் வகையில் சர்வதேசத் தரத்திலான பந்தயத் தடம் மற்றும் பயிற்சி மையங்கள் இங்கு அமைக்கப்படவுள்ளன.
முதன்மை நோக்கம்
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரர்களை உருவாக்குவதோடு, தமிழ்நாட்டை உலகளாவிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் மையமாக மாற்றுவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
நடிகர் அஜித் குமார் வெளியிட்ட அறிக்கை
முதல்வர் விஜய்யின் இந்த அறிவிப்பை வரவேற்று நடிகர் அஜித் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.
இளைஞர்களுக்கான வாய்ப்பு
"தமிழ்நாட்டின் இளைஞர்களை விளையாட்டுத் துறையின் பக்கம் ஈர்த்து, அவர்களிடம் உள்ள திறமைகளைக் கண்டறிந்து, அவற்றை முறையாக வளர்த்தெடுப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு முன்னெடுப்புகள் மிகுந்த பாராட்டுக்குரியவை".
நீல் ஆம்ஸ்ட்ராங் வரிகளுடன் பாராட்டு
பிரத்யேகமான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படவுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற வார்த்தைகளைச் சற்றே மாற்றி, "One small step by the Tamil Nadu Government, one giant leap for Indian motorsports" எனக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.
அரசின் முயற்சிகளுக்கு வாழ்த்து
"முதலமைச்சர் விஜய்யின் அனைத்து முயற்சிகளும் பெரும் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் அனைத்து விளையாட்டு முன்னெடுப்புகளும் மாபெரும் வெற்றி பெறட்டும்" என்று அஜித் குமார் வாழ்த்தியுள்ளார்.
=====