

தென்காசி பேருந்து விபத்து
Tenkasi Bus Accident News Tamil : தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் இன்று நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் சிறுவர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
விபத்து குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், மற்றும் மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டனர். அவர்கள் 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்சுகள் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் மேலும் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
6 நபர்கள் உயிரழப்பு
தனியார் பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்றதால் விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த விபத்தில் சிக்கி தற்போது வரை 6 நபர்கள்(Tenkasi Bus Accident Death Toll) உயிரிழந்துள்ளனர்.
தலா 3 லட்சம்
இந்நிலையில், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்திற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு தலா 3 லட்ச ரூபாய் அறிவித்துள்ளது.
ஸ்டாலின் இரங்கல்
மேலும், தென்காசி கடையநல்லூரில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளாகியிருக்கிறது என்றும் விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட கலெக்டரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தர சிகிச்சையையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளேன் என்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்துள்ளவர்கள் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.