

Tiruchendur Temple Mobile Phone Ban from July 1 Tamil News | Subrahmanya Swamy Temple Updates
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காகவும், ஆன்மிக சூழலைப் பாதுகாக்கவும் கோவில் நிர்வாகம் தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ஜூலை 1 முதல் தடை
அதன்படி, கோவிலுக்குள் பக்தர்கள் கைபேசி கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு, வரும் ஜூலை 1-ம் தேதி முதல் மிகவும் தீவிரமாக அமல்படுத்தப்பட உள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை வழங்கிய தீர்ப்பின் அடிப்படையிலேயே இந்த இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள புதிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து வரிசைகளிலும் பலத்த சோதனை
உண்மையில், கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி முதலே திருச்செந்தூர் கோவிலுக்குள் கைபேசி பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும், வரும் ஜூலை 1 முதல் இந்த உத்தரவு முழுமையாக தங்குதடையின்றி செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக, பொதுத் தரிசன வரிசை, 100 ரூபாய் விரைவு தரிசன வரிசை, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக வரிசை என அனைத்து பாதைகளிலும் வரும் பக்தர்கள் தீவிரப் பாதுகாப்புப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.
கைபேசி வைப்பு மையங்கள் ஏற்பாடு
பக்தர்கள் கோவிலுக்கு வரும்போதே தங்களது கைபேசிகளைத் தாங்கள் தங்கியிருக்கும் அறைகளிலோ அல்லது தங்களின் வாகனங்களிலோ பாதுகாப்பாக வைத்துவிட்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
'கைபேசி வைப்பு மையங்கள்'
ஒருவேளை மொபைல் போனை கையோடு கொண்டு வரும் பக்தர்களின் வசதிக்காக, கோவில் வளாகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் பாதுகாப்பான 'கைபேசி வைப்பு மையங்கள்' அமைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் அங்கு தங்களது போன்களை ஒப்படைத்துவிட்டு, அதற்கான ரசீதைப் பெற்றுக்கொண்டு நிம்மதியாக தரிசனத்திற்கு செல்லலாம்.
விதியை மீறினால் அதிரடி நடவடிக்கை
பாதுகாப்புப் பரிசோதனையின் போது பக்தர்களிடம் கைபேசிகள் இருப்பது கண்டறியப்பட்டால், அவை உடனடியாக அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு பாதுகாப்பு பெட்டகங்களில் வைக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.
அதே நேரத்தில், அவசர கால தேவைகளுக்காகக் கோவில் வளாகத்திற்குள் மருத்துவ மையம், ஆம்புலன்ஸ் சேவை, மின்கல ஊர்திகள், சக்கர நாற்காலிகள் மற்றும் பொது அறிவிப்பு வசதிகள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு மரியாதை
உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு மதிப்பளித்து, திருச்செந்தூர் முருகனை தரிசிக்க வரும் ஆன்மிக அன்பர்கள் அனைவரும் ஜூலை 1 முதல் கைபேசி இன்றி தரிசனம் செய்ய முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கோவில் நிர்வாகம் அன்போடு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கை கோவிலின் புனிதத்தன்மையை காப்பதற்கும், தரிசன வரிசைகளை ஒழுங்குபடுத்துவதற்கும் பெரிதும் உதவும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
=====