

மெர்கேட்டர் வரைபடத்திற்கு மாற்றாக ஐநா தீர்மானம்:
ஐக்கிய நாடுகள் சபை பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள “Correct the Map” தீர்மானம் உலக வரைபட வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது.
பல நூற்றாண்டுகளாக கல்வி மற்றும் பொதுப் பயன்பாட்டில் இருந்த மெர்கேட்டர் (Mercator) வரைபட முறைக்கு பதிலாக, நாடுகளின் உண்மையான பரப்பளவை பிரதிபலிக்கும் Equal Earth Projection வரைபடத்தை பயன்படுத்த வேண்டும் என உறுப்புநாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இந்த தீர்மானத்திற்கு இந்தியா, பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட 164 நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
அமெரிக்கா மட்டும் எதிர்ப்பு வாக்கு பதிவு செய்த நிலையில், 6 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
ஆப்பிரிக்க யூனியன் சார்பில் டோகோ இந்த தீர்மானத்தை முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.
1569-ஆம் ஆண்டு Gerardus Mercator உருவாக்கிய இந்த வரைபடம் கடல் பயணங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.
ஆனால் துருவப் பகுதிகளுக்கு அருகில் உள்ள நாடுகள் மற்றும் கண்டங்கள் உண்மையை விட மிகப் பெரியதாக தோன்றும் குறைபாடு இதில் உள்ளது.
இதனால் கிரீன்லாந்து, ஆப்பிரிக்காவுக்கு சமமான அளவில் இருப்பது போல தெரிகிறது.
ஆனால் உண்மையில் ஆப்பிரிக்கா, கிரீன்லாந்தை விட சுமார் 14 மடங்கு பெரியது.
இதேபோல் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் அளவுகளும் பெரிதாகக் காட்டப்படுவதால், ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் உண்மையான பரப்பளவு பொதுமக்களுக்கு சரியாக பிரதிபலிக்கப்படவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன.
2018-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட Equal Earth Projection, உலக நாடுகளின் உண்மையான பரப்பளவை முடிந்தவரை
துல்லியமாக பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதில் எந்த கண்டமும் செயற்கையாக பெரிதாகவோ சிறிதாகவோ காட்டப்படாது.
இதன் மூலம் ஆப்பிரிக்காவின் உண்மையான பரந்த நிலப்பரப்பும், அதன் உலகளாவிய முக்கியத்துவமும் தெளிவாக வெளிப்படும் என ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
ஐநாவின் இந்த தீர்மானம் சட்டப்பூர்வ கட்டாயம் கொண்டதல்ல. அதனால் மெர்கேட்டர் வரைபடம் முற்றிலும் தடை செய்யப்படவில்லை. கடல் மற்றும் விமான வழிசெலுத்தலுக்காக அது தொடர்ந்து பயன்படுத்தப்படும்.
எனினும் பள்ளிப் பாடப்புத்தகங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் டிஜிட்டல் வரைபட தளங்களில் Equal Earth போன்ற சம பரப்பு வரைபடங்களை பயன்படுத்த ஊக்குவிக்கப்பட உள்ளது.
“ஒரு நியாயமான உலகம், நியாயமான வரைபடத்திலிருந்து தொடங்குகிறது” என்று டோகோ வெளியுறவுத்துறை அமைச்சர் ராபர்ட் டஸ்ஸி தெரிவித்துள்ளார்.
உலகை மக்கள் எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள் என்பதை வரைபடங்கள் தீர்மானிப்பதால், இந்த மாற்றம் கல்வி, அரசியல் மற்றும் உலகளாவிய பார்வையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
500 ஆண்டுகளுக்கும் மேலாக உலகம் பார்த்து வந்த வரைபடக் கண்ணோட்டத்தில் இந்த தீர்மானம் ஒரு முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.
இனி புதிய தலைமுறையினர் உலகைக் காணும் விதமே மாறக்கூடும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
================