

18வது BRICS உச்சி மாநாடு செப்டம்பர் 11 முதல் 13 வரை புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. BRICS தலைவர் நாடாக உள்ள இந்தியா இந்த மாநாட்டை நடத்துகிறது.
"Building for Resilience, Innovation, Cooperation and Sustainability" என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் உறுப்பினர் மற்றும் கூட்டாளர் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
BRICS உறுப்பினர் நாடுகள் மற்றும் கூட்டாளர் நாடுகளின் தலைவர்கள், சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொள்வதால் உலக நாடுகளின் கவனம் டெல்லி மீது திரும்பியுள்ளது.
11 உறுப்பினர் நாடுகளை கொண்ட BRICS கூட்டமைப்பு உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட பாதி பேரை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
உலக GDP-யில் சுமார் 40 சதவீத பங்களிப்பை கொண்டுள்ள இந்த கூட்டமைப்பு, வர்த்தகம், முதலீடு, நிதி ஒத்துழைப்பு மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் குரலை வலுப்படுத்தும் முக்கிய மேடையாக பார்க்கப்படுகிறது.
BRICS மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் செப்டம்பர் 11 ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மாநாட்டின் போது பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகளை எளிதாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டை முன்னிட்டு டெல்லியில் 35-க்கும் மேற்பட்ட சாலைகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் 22 இடங்களில் மாற்றுப்பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
விமான நிலையம், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய அரசு பகுதிகளுக்குச் செல்லும் வழித்தடங்களில் சிறப்பு கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
பொதுமக்கள் மெட்ரோ சேவையை பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
BRICS மாநாட்டை முன்னிட்டு டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
25,000 முதல் 30,000 வரையிலான போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ட்ரோன் கண்காணிப்பு, எதிர்-ட்ரோன் அமைப்புகள், ஹோட்டல்கள் மற்றும் மாநாட்டு வளாகங்களில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மாநாட்டில் உறுப்பினர் நாடுகளுக்கிடையேயான வர்த்தக ஒத்துழைப்பு, உள்ளூர் நாணயங்களில் பரிவர்த்தனை, செயற்கை நுண்ணறிவு.
அதுமட்டுமல்லாமல் டிஜிட்டல் பொருளாதாரம், பசுமை நிதி, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உலக தெற்கு நாடுகளின் நலன்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.