140 கோடி மக்களின் கொண்டாட்டம் :
PM Modi Independence Day 2025 Speech : வரலாற்று சிறப்பு மிக்க டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பிறகு உரையாற்றிய பிரதமர் மோடி, ”140 கோடி மக்களின் கொண்டாட்டம் இந்த நன்னாள். ஆபரேஷன் சிந்தூர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன். கோடிக்கணக்கான இதயங்களில் இன்று பெருமிதம் பொங்குகிறது.
இந்தியாவின் ஒளிவிளக்கு ’அரசியல் சட்டம்’ :
அரசியலமைப்பு சட்டம் தான் இந்தியாவுக்கு ஒளிகாட்டும் விளக்கு. கடந்த 78 ஆண்டுகளாக அரசியலமைப்பு சட்டம் தான் நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது. இந்திய சுதந்திரத்தில் பெண்களின் சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களுக்கு வீர வணக்கம்.
பயங்கரவாதிகளுக்கு பாடம் புகட்டினோம் :
இன்றைய நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆபரேஷன் சிந்தூர் வீரர்களை வணங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். பயங்கரவாதிகளுக்கு நமது ராணுவம் பாடம் புகட்டியது.
மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது :
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது. எதிரிகள் மீண்டும் தாக்குதல் நடத்த முயன்றால் எங்கு எப்போது தாக்குதல் என்பது குறித்து நமது படைகள் தீர்மானிக்கும். அணு ஆயுத பூச்சாண்டிகளுக்கு எல்லாம் இனி இந்தியா பயப்படாது. பயங்கரவாதிகளுக்கு நிதி அளித்து ஊக்கப்படுத்தும் யாராக இருந்தாலும் தண்டிப்போம்.
சிந்து நதி நீர் இந்தியாவுக்கே சொந்தம் :
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஏற்புடையதல்ல. ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக ஓடாது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ஒருதலைப்பட்சமானது. சிந்து நதி நீர் இந்திய விவசாயிகளுக்கு மட்டுமே சொந்தமானது.
மேலும் படிக்க : சுதந்திர தின உரை யோசனைகள் : நாட்டு மக்களுக்கு பிரதமர் அழைப்பு
இந்தியாவின் கையில் உலகச் சந்தை :
இளைஞர்கள் உற்பத்தித்துறையில் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்தியதன் மூலம் பல கோடி மக்களின் உயிரை காப்பாற்றினோம். உலகின் சந்தையை இந்தியா ஆள வேண்டும்.
அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு கதவுகள் திறந்துள்ளன. வெளிநாடுகளின் சமூக வலைதளங்களை நாம் ஏன் சார்ந்திருக்க வேண்டும்? சொந்த நாட்டின் சமூக வலைதளம் குறித்து நமது இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும்” இவ்வாறு பிரதமர் மோடி உரைநிகழ்த்தினார்.
======