திருமலை ஏழுமலையான் கோவில்
Tirupati Tirumala Darshan on Purattasi 4th Saturday 2025 : உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். பண்டிகை நாட்களில் இது பல மடங்கு பெருகுகிறது. அந்த வகையில் புரட்டாசி மாதம் என்பதால் தற்போது கூட்டம் அலைமோதுகிறது. வார விடுமுறை மற்றும் புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமை ஆகியவற்றால் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
புரட்டாசி சனிக்கிழமை
அதன்படி 2வது சனிக்கிழமை விடுமுறை புரட்டாசி மாத நான்காவது மற்றும் கடைசி சனிக்கிழமை ஆகிய காரணங்களால் இன்று பக்தர்கள் பெருமளவில் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதன் காரணமாக திருமலையில் தலைமுடி காணிக்கை கொடுக்கும் இடம், பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கும் வளாகம், லட்டு விற்பனை கூடம், இலவச அன்னதான மையம் ஆகிய இடங்களில் மக்கள் நிரம்பி வழிகின்றனர்.
20 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்
இலவச டோக்கன் பெறாமல் நேரடி இலவச தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்கள் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி கும்பிட்டு செல்கின்றனர். அதன்படி, பெருமாள் தரிசனத்திற்கு 20 மணி நேரம் பிடிக்கிறது. தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்கள் தேவையான உணவு உள்ளிட்டவற்றை தேவஸ்தான நிர்வாகம் வழங்கி வருகிறது.
மேலும் படிக்க : புரட்டாசி சனிக்கிழமை மட்டும் தரிசனம் : பெருமாள் முடி மலை கோவில்
இலவச டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் 5 முதல் 7 மணி நேரமும் 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் 3 முதல் 5 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டு செல்கிறார்கள். பக்தர்களின் வெள்ளத்தால் திருமலையும், திருப்பதியும் திணறி வருகிறது. வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன.
========