இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு :
Election Commission Begins SIR in Tamil Nadu : பிகார் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கவிருக்கும் நிலையில், பிகார் முதல்வர் நிதிஷ்குமார், இண்டியா கூட்டணியின் சார்பாக தேஜஸ்வி யாதவ் ஆகியோர் முதலமைச்சர் பதவிக்கு களமிறங்கியுள்ளனர். மேலும் இந்த ஆண்டு தேர்தலில் புதிய கட்சிகள் பிகாரில் களமிறங்கியுள்ளதால், வாக்குகள் பிரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், கடும் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்,தற்போது இந்திய தேர்தல் ஆணையம் தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று தெரிவித்துள்ளது.
அரசியல் பிரதிநிதிகள் கூட்டம்
இந்திய தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சிறப்பு தீவிர திருத்த அறிவிப்பு வந்தவுடன் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கூட்டம் நடத்தப்பட்டு ஆலோசனைகள் பெறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, வீடு வீடாகச் சென்று விண்ணப்பம் வழங்கும் பணியைத் தேர்தல் அதிகாரிகள் தொடங்குவார்கள் என்றும், பொதுமக்கள் பூர்த்தி செய்யும் விண்ணப்பங்களைச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளே வாங்கி ஒப்படைப்பார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : SIR: இந்தியர்களுக்கே வாக்குரிமை, உறுதி செய்வதில் என்ன தவறு? : பாஜக
பிகாருக்கும் தமிழகத்திற்கும் மாற்றம் இருக்கும்
மேலும், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வழங்க ஒரு மாதம்வரை கால அவகாசம் வழங்கப்படும் என்றும், 90 ஆயிரம் அலுவலர்கள் உட்பட தேர்தல் உயர் அதிகாரிகளும் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பிகாரில் நடைபெற்ற திருத்தப் பணிகளுக்கும், தமிழகத்தில் நடைபெறவுள்ள பணிகளுக்கும் சில மாற்றங்கள் இருக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.