திருப்பதி பிரம்மோற்சவம் :
AI Technology in Tirumala Brahmotsavam 2025 : உலகப் புகழ் பெற்ற திருப்பதி கோவிலுக்கு ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தந்து, பெருமாளை சேவித்து செல்கின்றனர். இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று நவராத்திரி பிரம்மோற்சவம். இது ஆண்டு தோறும் நடத்தப்படும். பிரம்மனே பிரம்மோற்சவத்தை நடத்துவதாக ஐதீகம். இதற்காக திருமலை கோவில் விழாக்கோலம் பூண்டிருக்கிறது.
கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவம் :
கோவிலில் உள்ள கொடி மரத்தில் நேற்று மாலை சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, கொடியேற்றப்பட்டது. உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பரை ஊர்வலமாக தங்க கொடிமரத்தின் அருகே கொண்டு வந்தனர். அங்கு வேதபண்டிதர்கள் வேதங்கள் ஓத, மங்கள வாத்தியங்கள் முழங்க, கருடன் சின்னம் பொறித்த கொடி, தங்க கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.முப்பது முக்கோடி தேவாதி தேவர்களையும் பிரம்மோற்சவத்துக்கு அழைப்பு விடுப்பதற்கான ஒரு நியதி இது.
தினமும் சுவாமி வீதியுலா :
அக்டோபர் மாதம் 2ம் தேதி வரை தினமும் காலையில் 8 மணி முதல் 10 மணி வரையிலும், இரவில் 7 மணி முதல் 9 மணி வரையிலும் உற்சவரான மலையப்பர் விதவிதமான(TTD Brahmotsavam 2025 Dates) வாகனங்களில் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார். ஒரு நாள் தங்க தேரோட்டத்திலும், ஒரு நாள் மர தேரிலும் பவனி வந்து பெருமாள் காட்சி அளிக்கிறார். பிரம்மோற்சவம் நடைபெறும் அனைத்து நாட்களிலும் தினமும் மதியம் உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெறுவது ஐதீகம். இதில் இரண்டு முறை சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடத்தி, விதவிதமான அலங்காரங்களும் செய்யப்படும்.
ஆந்திர அரசு சார்பில் பட்டு வஸ்திரங்கள் :
பிரம்மோற்சவ விழாவினை முன்னிட்டு திருப்பதி மற்றும் திருமலை விழாக்கோலம் பூண்டுள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர அரசு தரப்பில் பட்டு வஸ்திரங்களை ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்கினார். ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரத்தை தலையில் சுமந்து சென்று கோயிலில் தேவஸ்தான அர்ச்சகர்களிடம் அவர் சமர்ப்பித்தார்.
திருமலையில் துணை ஜனாதிபதி தரிசனம் :
பிரம்மோற்சவ விழாவில் முதல் நாளான நேற்று இரவு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் மலையப்பர் ஆதி சேஷனாக கருதப்படும் பெரிய சேஷ வாகனத்தில் எழுந்தருளினார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை நடைபெற்ற இந்த வாகன சேவையில் குடியரசு துணை தலைவர் சிபி ராதாகிருஷ்ணன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர். வாகன சேவையை காண மாட வீதிகளில் திரளான பக்தர்கள் திரண்டு இருந்தனர். 28 மாநிலங்களில் இருந்து வந்திருந்த நடன கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தன.
திருப்பதியில் AI தொழில்நுட்பம் :
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டத்தை சீரமைக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை (ஐசிசி), வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நிகழ்வுகளை ஏஐ மூலம் பதிவு செய்து, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் உடனுக்குடன் அறிய முடியும். கோயிலில் பக்தர்களின் கூட்டத்தை சீரமைக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது நாட்டிலேயே இதுவே முதல் முறையாகும்.
மேலும் படிக்க : TTD Brahmotsavam 2025 : ஏழுமலையான் கோவில் அலங்காரத்திற்கு 60 டன் மலர்கள்
விரைவாக தரிசனம் செய்யலாம் :
மேலும், தரிசன வரிசையில் குற்றவாளிகள் அல்லது தீவிரவாதிகள் தொடர்பான சந்தேகத்துக் குரிய நபர்களை சுலபமாக அடையாளம் காண முடியும். காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியும். மேலும் பக்தர்களின் கூட்ட நெரிசலை உடனுக்குடன் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து விரைவான தரிசன ஏற்பாட்டுக்கு இது வழிவகுக்கும்.