அறங்காவலர் குழு கூட்டத்தில் முக்கிய முடிவு
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழுக் கூட்டம், தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமையில் திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தேவஸ்தான தலைவர் பி.ஆர்.நாயுடு, பக்தர்களின் நலன் கருதி நாட்டிலேயே முதல் முறையாக நடைமுறைப்படுத்தப்பட உள்ள காப்பீட்டுத் திட்டம் குறித்து அறிவித்தார்.
இயற்கை மரணம் மற்றும் விபத்துக் காப்பீடு உயர்வு
நாட்டிலேயே முதல் முறையாக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்குக் காப்பீடு வழங்கப்பட உள்ளது.
'குரூப் இன்சூரன்ஸ்'
சுவாமி தரிசனம் செய்ய வந்து எதிர்பாராதவிதமாக இயற்கை மரணம் அடையும் பக்தர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் இன்சூரன்ஸ் தொகை வழங்கப்படும். இதற்காக தேவஸ்தானம் சார்பில் ரூ.3 கோடி 'குரூப் இன்சூரன்ஸ்' கட்டணமாக செலுத்தப்படும் என்றார்.
அதேபோல், திருமலை மலைப்பாதையில் ஏற்படும் விபத்துகளில் உயிரிழக்கும் பக்தர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த ரூ.3 லட்சம் காப்பீட்டுத் தொகை, தற்போது ரூ.10 லட்சமாக கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டத்திற்காகத் தேவஸ்தானம் சார்பில் ரூ.70 லட்சம் பிரீமியம் தொகையாகச் செலுத்தப்படவுள்ளது.
400 புதிய பணியாளர்கள் நியமனம்
திருப்பதியில் நாள்தோறும் பக்தர்களுக்கு லட்சக்கணக்கில் லட்டு பிரசாதம் தயாரிக்கப்படும் மடப்பள்ளியில் பணியாற்றும் ஊழியர்களில் பலர் அடுத்தடுத்து ஓய்வு பெறவுள்ளனர்.
இதனால் பிரசாதத் தயாரிப்பில் எந்தவிதத் தொய்வும் ஏற்படாமல் இருக்க, 400 புதிய நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க அறங்காவலர் குழு முடிவெடுத்துள்ளது.
இதற்காக அரசுக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அரசின் அனுமதி கிடைத்தவுடன் விரைவாகப் பணியாளர்கள் தேர்வு நடைபெறும் என்றும் தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ”பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகள்” நிறைவு செய்த பிரதமர் மோடி : பாஜகவின் பிரமாண்ட 'சேவா சங்கல்ப் அபியான்' கொண்டாட்டம்!
=====