மக்களை காப்போம் :
Edappadi Palanisamy on MK Stalin : 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பிரசாரத்தை தொடங்கி உள்ள அவர், தினந்தோறும் மக்களை சந்தித்து வருகிறார். அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் வானுார் தொகுதிக்குட்பட்ட திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில், மக்களை சந்தித்த அவர், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என சொல்லி, ஆட்சிக்கு வந்த திமுக 28 மாதங்களுக்கு பிறகே திட்டத்தை கொண்டு வந்தது. இதற்கு அதிமுக(ADMK) கொடுத்த அழுத்தமே காரணம்.
பெண்களை ஏமாற்றிய திமுக அரசு :
தேர்தல் வர உள்ளதால், 30 லட்சம் பேருக்கு வழங்க விதிகளை தளர்த்தி உள்ளனர். அதையும் 8 மாதம் மட்டுமே வழங்க உள்ளனர். ஆக, 52 மாதம் பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். தேர்தலுக்கு பிறகு தகுதி அடிப்படையில் என கூறி அதையும் நிறுத்தி விடுவார்கள். இந்தியாவில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டாலும், திமுகவில் மட்டும் தொடர்கிறது.
அமலாக்கத்துறை - ஸ்டாலினுக்கு பயம் :
அமலாக்கத்துறையை(ED Raid) கண்டு முதல்வர் ஸ்டாலினுக்கு பயம். பாஜகவுக்கு, அதிமுக அடிமையாகி விட்டது என்கிறார் ஸ்டாலின். அமலாக்கத்துறை சோதனைக்கு யார் அஞ்சி நடுங்குகின்றனர் என்பது ஊருக்கே தெரியும். நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அதிமுக அரசு கொடுத்ததால், 2,818 மாணவர்கள் மருத்துவம் படித்துள்ளனர்.
அதிமுகவுக்கு அச்சமே கிடையாது :
அதிமுக எதற்கும் அஞ்சாத கட்சி, திமுக அமைச்சர்கள் தேர்தலுக்கு பிறகு சிறைக்கு செல்வது உறுதி. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் என மக்கள் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், 'ஓரணியில் தமிழகம்' என, மக்களை திரட்ட முயற்சிக்கிறார் முதல்வர். மக்கள் ஓரணியில் திரண்டு, உங்களை ஆட்சியை விட்டு விரட்டப் போகின்றனர். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி, தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
ஸ்டாலினுக்கு நோபல் பரிசு :
மக்களை மடைமாற்றம் செய்ய முதல்வர் ஸ்டாலின்(CM Stalin) தந்திரமாக பேசி வருகிறார். பொய் பேசுவதற்காக ஸ்டாலினுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி(Edappadi Palanisamy) பிரசாரம் செய்தார்.
====