Interlocking Gate in Railway : கடலூர் மாவட்டத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதியதில் மாணவர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து கேட்கீப்பரின் கவனக்குறைவால் ஏற்பட்டதா? வேன் ஓட்டுனரின் அலட்சியமா? என்பதில் தொடர்ந்து சர்ச்சை நிலவி வருகிறது. ரயில் வரும் நேரத்தில் ரயில்வே கேட் திறக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.
விபத்தினை தடுக்கும் இன்டர்லாக்கிங் :
இந்தநிலையில், விபத்துக்குள்ளான ரயில்வே கேட் இன்டர்லாக்கிங் முறையில்(Interlocking System) செயல்படவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. இது போன்ற விபத்துக்களை தடுக்கவே ரயில்வே துறையில் இன்டர்லாக்கிங் சிஸ்டம் என்ற பாதுகாப்பு தொழில் நுட்பம் பயன்படுத்தப் படுகிறது.
16,000 ரயில்வே கேட்கள் :
நாடு முழுவதும் சுமார் 16,000 ரயில்வே கேட்கள் உள்ளன. விபத்துகளுக்கு ரயில்வே கடவுப் பாதைகள் முக்கிய காரணமாக இருந்ததால், ஆளில்லா கடவுப் பாதைகளை மத்திய அரசு முற்றிலுமாக நீக்கி விட்டது. அனைத்து ரயில்வே கேட்களிலும் ஆட்கள் நியமிக்கப்பட்டு, இருதரப்பு போக்குவரத்தும் கண்காணிக்கப்படுகிறது.
ஆனால், இன்டர்லாக்கிங் செய்யப்படாத ரயில்வே கேட்களில் கேட்கீப்பர்கள் கண்காணிப்புடன் செயல்பட்டால் மட்டுமே விபத்து ஏற்படாமல் தடுக்க முடியும். கடலூர் ரயில் விபத்து(Cuddalore Train Accident) நிகழ்ந்த கேட்டிலும் இன்டர்லாக்கிங் வசதி இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இன்டர்லாக்கிங் தொழில்நுட்பம் :
இன்டர்லாக்கிங் தொழில்நுட்பம்(Interlocking Technology) பயன்படுத்தப்படும் ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தால் மட்டுமே அந்த வழியாக வரும் ரயிலுக்கு சிக்னல் செல்லும். சிக்னல் கிடைத்தால் மட்டுமே தொடர்ந்து அந்த ரயில் பயணிக்கும்,
ஒருவேளை சிக்னல்(Train Signal) செல்லா விட்டால் ரயில் நிறுத்தப்படும். இன்டர்லாக்கிங் பாதுகாப்பு அமைப்பு பயன்படுத்தப்படும் ரயில் வழித்தடங்களில் ஒவ்வொரு ரயில்வே கேட்டும் சிக்னல்கள் மூலம் இணைக்கப்படுகின்றன.
சிக்னல்களை கட்டுப்படுத்தும் இன்டர்லாக்கிங் :
ரயில் அந்தப் பாதையை கடக்கும் 5 நிமிடம் முன்னதாகவே ரயில்வே கேட் மூடப்படும். இவ்வாறு ரயில்வே கேட் மூடப்பட்ட உடன் ரயில் வரும் பாதையில் 1 கி.மீ.க்கு முன்னர் உள்ள சிக்னல்களில் பச்சை விளக்குகள் எரியும், இதைப் பார்த்து ரயில் ஓட்டுநர் தொடர்ச்சியாக ரயிலை ஓட்டுவார். ஒருவேளை ரயில்வே கேட் மூடப்படா விட்டால் அந்த சிக்னலில் சிகப்பு விளக்கு எரியும் , இதைக் கண்ட ரயில் ஓட்டுநர், ரயிலை முன் கூட்டியே நிறுத்தி விடுவார். இதன் மூலம் விபத்துகள் தடுக்கப்படும்.
எனவே, நாடு முழுவதும் இன்டர்லாக்கிங்(Interlocking) இல்லாத ரயில்வே கேட்களிலும்(Railway Gate) உடனடியாக அந்த வசதியை கொண்டு வருவதே விபத்துகளை தடுக்க வசதியாக இருக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
=====