Karur overcrowding: Supreme Court stays order cancelling government recruitment!
உயர் நீதிமன்ற உத்தரவுக்குத் தடை
கரூர் தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்கிய அரசுப் பணி நியமன ஆணைகளை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில் வழக்குகள்
கடந்த ஆண்டு தவெக தலைவர் விஜய் தலைமையிலான பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்பட்டது.
இதை எதிர்த்து மனிதநேய ஜனநாயக கட்சி, நாம் தமிழர் கட்சி மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
பணி ஆணை ரத்து பின்னணி
TNPSC மூலம் வேலைக்கு லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் சூழலில், முறையான கொள்கை முடிவுகள் இன்றி வழக்கம் போலன்றி இவர்களுக்கு விதிவிலக்கு அளித்து வேலை வழங்குவது அரசியலமைப்பு சட்டப்பிரிவு 14 மற்றும் 16-க்கு முரணானது எனக் கூறி பணி ஆணைகளை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
உச்ச நீதிமன்றம் கண்டனம்
இதை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம், "கரூர் நெரிசல் ஒரு துயர சம்பவம், இதை வைத்து அரசியல் செய்யக் கூடாது" என நாம் தமிழர் கட்சிப் பிரமுகருக்கு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் "பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசுப் பணி வழங்கக் கூடாது என்று சொல்ல நீங்கள் யார்?" என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம்
உச்ச நீதிமன்றத்தின் இந்த இடைக்காலத் தடை உத்தரவின் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட அரசுப் பணி தொடர்வது தற்காலிகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : கரூர் கூட்ட நெரிசல்: அரசுப் பணி ரத்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
=====