Madurai HC on Sivagangai lockup death  Madurai HC on Sivagangai lockup death
தமிழ்நாடு

விசாரணை என்ற பெயரில் ”கொலை” : அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

காவல்நிலையத்தில் இளைஞர் மரண வழக்கில் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, `அரசே பொறுப்பேற்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளது.

Kannan

சிவகங்கை திருப்புவனத்தில் கடந்த 28 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார் காவல் நிலையத்தில் உயிரிழந்த சம்பவம் தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

நகையை திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட கோவில் காவலாளி அஜித் குமார் விசாரணையின் போது அடித்து கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த வழக்கில் பிரேத பரிசோதனை அடிப்படையில் 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். சிவகங்கை எஸ்பி ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது.

மேலும் படிக்க : லாக்அப் மரணம் : காத்திருப்போர் பட்டியலில் சிவகங்கை எஸ்பி.

இது லாக் அப் மரணம் தான் எனக் குற்றம்சாட்டி வரும் எதிர்க்கட்சிகள், சிபிஐ விசாரணை அவசியம் என வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியன், மரியா கிளீட் முன்பு இன்றும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சரமாரியாக கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த மரணத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

நீதிபதிகள் தெரிவித்த கருத்து:

அஜித்தை எதற்காக வெளியே வைத்து விசாரணை செய்தீர்கள்? ஏன்

காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்யவில்லை''

இந்த வழக்கில் காவல்துறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

ஒட்டுமொத்த காவல்துறையை நாங்கள் குறை சொல்லவில்லை. ஆனால் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

இளைஞர் அஜித்குமார் மரணத்திற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.

நகை திருட்டு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது ஏன்?

காவல் கண்காணிப்பாளரை உடனடியாக இடமாற்றம் செய்ய என்ன காரணம் ?

புலனாய்வு செய்வதற்கு தான் காவல்துறை? அடிப்பதற்கு எதற்கு காவல்துறை?

உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உண்மையை மறைக்க கூடாது.

காவல்துறை, நீதித்துறை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இப்படி நடந்திருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்?

கல்வியறிவில் சிறந்த மாநிலமான தமிழகத்தில் இப்படி நடப்பதை ஏற்க முடியாது

வழக்கை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் தமிழக அரசு செயல்பட்டால் கடும் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

மேலும் படிக்க : இளைஞர் மரணம் சிபிஐ விசாரணை தேவை:எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

=====