திருவண்ணாமலை கோவில் :
Tiruvannamalai Karthigai Deepam 2025 Date : தமிழகத்தில் நடைபெறும் புகழ்பெற்ற கோவில் விழாக்களில், திருவண்ணாமலை கார்த்திகை தீபமும் ஒன்று. அன்றைய தினம் லட்சக் கணக்கான மக்கள் அங்கு கூடி, அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு, கிரிவலம்(Girivalam) வருவார்கள். ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கார்த்திகை தீபத் திருவிழா வருவது வழக்கம்.
பந்தக்கால் முகூர்த்தம் :
அதன்படி இந்த ஆண்டுக்கான ( 2025 ) கார்த்திகை தீபத் திருவிழா, டிசம்பர் 3ம் தேதி(Tiruvannamalai Karthigai Deepam 2025 Date) நடைபெறுகிறது. இதற்கான பூர்வாங்க பணிகளை கோவில் நிர்வாகம் தொடங்கி இருக்கிறது. அதன்படி, பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை நடைபெற்றது. தீபத் திருவிழாவிற்கான அடிப்படை வேலைகளைத் தொடங்கும் முக்கியச் சடங்கு இது. இன்று காலை அண்ணாமலையார் கோயிலில்(Annamalaiyar Temple) உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் காட்டப்பட்டன
கார்த்திகை தீபம் - கொண்டாட காரணம் :
கார்த்திகை தீபம்(Tiruvannamalai Karthigai Deepam Celebrated Reason) என்பது சிவபெருமானுக்கும் அவரது மகன் முருகனுக்கும் கொண்டாடப்படும் ஒரு பழங்கால விழா. விளக்குகளை ஏற்றுவது இந்த விழாவின் முக்கிய சடங்காகும். இந்த நாளில் விளக்குகளை ஏற்றுவது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது. விளக்குகளை ஏற்றுவது தீமையை நன்மை வென்றதைக் குறிக்கிறது. கார்த்திகை தீபத்தன்று , மக்கள் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றி, தங்கள் வாழ்க்கையில் செழிப்பையும், மங்களத்தையும் ஏற்படுத்த சிவபெருமானையும், முருகனையும் வேண்டி வழிபடுவர்.
கார்த்திகை மாதத்தில்(Karthigai Month), கிருத்திகை நட்சத்திரத்தில் சிவபெருமான் திருமாலுக்கும், பிரம்மனுக்கும் ஜோதி வடிவமாக காட்சி தந்ததைக் கொண்டாடும் விதமாகவும் இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
10 நாட்கள் நடைபெறும் விழா :
பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கி தெப்பல் உற்சவத்துடன் நிறைவு பெறும். 10 நாட்களும் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர். 6ம் நாள் இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி தேரிலும், 7ம் நாளில் மரத்தேரிலும் எழுந்தருளும் தேர் திருவிழாவும் நடைபெறும். விநாயகர் தேர், முருகர் தேர், அண்ணாமலையார் தேர், அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என தினந்தோறும் 5 தேர்களும் ஒன்றன்பின் ஒன்றாக அண்ணாமலையார் கோவில் மாடவீதியில் வலம் வரும்.
மேலும் படிக்க : திருப்பதியில் செப்.24 முதல் பிரம்மோற்சவம் : 28ம் தேதி ’கருடசேவை’
பரணி தீபம், கார்த்திகை தீபம் :
விழாவின் உச்ச நிகழ்வாக பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து 10வது நாள் அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் சாமி சன்னதி முன்பு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும். மலையே சிவனாக வணங்கப்படும் அண்ணாமலை உச்சியில் 11 நாட்களுக்கு அண்ணாமலையார் தீபச்சுடராய், தீப்பிழம்பாய் காட்சி தருவார். இந்த தீப தரிசன நாளில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 35 முதல் 40 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு, 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை வலம் வந்து மகா தீபத்தை வணங்கி செல்வர்.
இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 21ம் தேதி தொடங்கி டிசம்பர் 7ம் தேதி நிறைவு பெறுகிறது.
==============