பரந்தூர் அருகே மதுரமங்கலம் கிராமத்தில் 422 ஏக்கரில் ரூ.175 கோடியில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மதுரமங்கலத்தில் சிப்காட் பூங்கா
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே உள்ள மதுரமங்கலம் கிராமத்தில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக நிலத்தைக் கையகப்படுத்தும் பணிகளுக்குத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இத்தொழிற்பூங்காவில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு சாதன உற்பத்தித் தொழிற்சாலைகள் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்ட பின்னணி
முன்னதாக, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் ஏகனாபுரத்தில் சென்னையின் 2-வது சர்வதேச பசுமை விமான நிலையம் அமைக்கும் திட்டத்தில் மத்திய அரசுடன் இணைந்து முந்தைய திமுக அரசு ஈடுபட்டிருந்தது.
தவெக ஆட்சி வந்தவுடன் ரத்து செய்யப்பட்ட பரந்தூர் திட்டன்
5,800 ஏக்கரில் இத்திட்டத்தை செயல்படுத்தத் திட்டமிட்டு சுமார் 1,800 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாகத் தவெக ஆட்சி வந்தவுடன் பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்தார்.
ரூ.175 கோடி மதிப்பீட்டில் 422 ஏக்கர் நிலம் கையகப்படுத்துதல்
விமான நிலையத்திற்குப் பதிலாக அங்கே தொழிற்பூங்கா அமைக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்திருந்த சூழலில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடமே ஒப்படைக்க வேண்டும் என இடதுசாரிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
புதிய சிப்காட் தொழிற்பூங்கா
இந்நிலையில்தான், மதுரமங்கலம் கிராமத்தில் 422 ஏக்கர் பரப்பளவில் ரூ.175 கோடி மதிப்பீட்டில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கான நில கையகப்படுத்தும் அரசாணையைத் தமிழ்நாடு அரசு தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரிக்ஸ் உச்சிமாநாடு: இந்தியா வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் புதின்... பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை!
=====