

நகரங்களில் ஆன்லைன் ஷாப்பிங்
ஆன்லைன் ஷாப்பிங் என்பது நகர மக்களின் கலச்சாரமாகி விட்டது. எந்த பொருளையும், வீட்டில் இருந்தவாறே வாங்க இந்த தலைமுறை பழகி விட்டது. கடைக்கு செல்வது என்பதே அவர்களுக்கு அரிதான ஒன்றாகி விட்டது.
காலையில் எழுந்ததும் காபி குடிப்பதில் தொடங்கி, இரவு டின்னர் முடிக்கும் வரை எதற்கு எடுத்தாலும் ஆன்லைன் வர்த்தகம் தான்.
இண்டியா போஸ்ட் - ப்ளிப்கார்ட் நிறுவனம்
இந்தியாவில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்திற்கும் கிராமங்களில் இண்டியா போஸ்ட் எனப்படும், அரசு அஞ்சலகங்கள் உள்ளன. ப்ளிப்கார்ட் நிறுவனம் இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிகட்டி பறக்கிறது.
இதுவரை பெருநகரங்கள், நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே இருந்த இந்த நிறுவனத்தின் சேவை, இனி கிராமப் புறங்களிலும் கால்பதிக்கிறது.
வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து
இதற்காக இண்டியா போஸ்ட் உடன் ப்ளிப்கார்ட் நிறுவனம் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் முறைப்படி கையெழுத்து இடப்பட்டு இருக்கிறது.
பரந்த நெட்வொர்க், வலிமையான இணைப்பு
அஞ்சல் துறையின் பரந்த நெட்வொர்க்கையும், பிளிப்கார்ட் நிறுவனத்தின் பலத்தையும் இணைத்து, நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான, வேகமான பார்சல் விநியோக சேவைகளை வழங்குவதே இந்த இணைப்பின் முக்கிய நோக்கம்.
இதன் மூலம், பிளிப்கார்ட் பார்சல்களை வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே கொண்டு சேர்க்கும் (Last-mile delivery) பணியை இந்திய அஞ்சல் துறை மேற்கொள்ளும்.
1.6 லட்சம் கிராமங்களில் ஆன்லைன் வர்த்தகம்
1.6 லட்சத்திற்கும் அதிகமான அஞ்சலகங்கள் மூலம் சேவை
இந்திய அஞ்சல் துறைக்குச் சொந்தமான 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட அஞ்சலகங்கள் மூலம் இந்த விநியோக சேவையானது நடைபெற இருக்கிறது.
நகரங்கள் மட்டுமின்றி, கடைக்கோடியில் உள்ள கிராமப்புறங்களுக்கும் எளிதான பொருட்களை விநியோகிக்க முடியும். இந்த சேவையில் முன்கூட்டியே பணம் செலுத்தும் வசதி, டெலிவரியின் போது பணம் செலுத்தும் வசதி,நேரலையில் கண்காணிக்கும் தொழில்நுட்ப வசதிகளும் உள்ளன.
மின்னணு வர்த்தகத்தில் புதிய மைல்கல்
இரு நிறுவனங்களுக்கும் இடையேயான மேம்பட்ட தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, பார்சல்களை விரைவாகவும், துல்லியமாகவும் வாடிக்கையாளர்களிடம் சேர்க்க உதவும். இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் மின்னணு வர்த்தகத் துறைக்கு இந்த ஒப்பந்தம் ஒரு வலுவான அடித்தளமாக அமையும்.
ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தக எல்லை வரிவடைவதோடு, இந்திய அஞ்சல் துறையின் உள்கட்டமைப்பு வசதிகளும் மேம்படும்.
இதன்காரணமாக பார்சல் வணிகம் கிராமங்களிலும் பெருகும். டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஏற்ப முன்னணி லாஜிஸ்டிக்ஸ் (Logistics) அமைப்பாக அஞ்சல்துறை மாறும்.
================