

உச்சம் தொட்ட தங்கம் விலையில் மாற்றம்
Gold and Silver Rate Today : தமிழகம் மட்டுமல்லாது, இந்தியாவில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தற்போது முந்தைய நாள்களில் ஏறிய தங்க விலை சற்று மன ஆறுதல் தரும்படி இரண்டு நாட்களாக குறைந்துள்ளது. இது நகை வாங்குவோர் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பொருளாதாரச் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு 60 ஆயிரத்திற்கு இருந்த 1 சவரன் இன்று 1 லட்சத்து 20 ஆயிரத்தை தாண்டி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இரண்டு நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
இந்நிலையில், நேற்று, தங்கம் விலை பவுனுக்கு காலையில் ரூ.4,800 குறைந்தது, மாலையில் மேலும் ரூ.2,800 குறைந்து, மொத்தமாக ஒரே நாளில் பவுனுக்கு ரூ.7,600 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,26,800 க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த மாதத்தின் கடைசி நாளான இன்று (ஜன.31) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு மேலும் ரூ.7600 சரிந்துள்ளது. அதன்படி, இன்று கிராமுக்கு ரூ.950 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,900-க்கும், பவுனுக்கு ரூ.7,600 குறைந்து ஒரு பவுன் 1,19.200-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.350-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.3,50,000-க்கும் விற்பனையாகிறது.
நகைவிலை குறைவால் சாமானியர்கள் மகிழ்ச்சி
அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் செயல்பாடுகளால் தென் கொரியா, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள் டாலர் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துள்ளன. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் டாலரை விற்றுவிட்டு, தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கின.
இதனால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்நிலையில், இந்த வகை முதலீடுகள் சற்றே குறைந்துள்ளதால் ஆபரணத் தங்கம் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். தொடர்ச்சியாக இரண்டு நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.15200 குறைந்துள்ளது. நகையை வாங்கும் மக்களே சற்று நகர்ந்து போன நிலையில், இந்த விலை சரிவு சற்று நகைபிரியர்கள் முதல் சாமானியர்கள் வரை நிம்மதியடைய செய்துள்ளது.