

இந்தியாவில் ரூபாய் நோட்டுகள்
இந்தியாவில் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. 1, 5, 10, 20, 50, 100, 200, 500 நோட்டுகள் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை உயர்தர தாளில் அச்சிடப்பட்டு, புழக்கத்தில் விடப்பட்டாலும், நீண்ட உழைப்பதில் சிரமம் இருக்கிறது.
பிளாஸ்டிக் கரன்சிகள்
இதன் காரணமாக ஆண்டு தோறும், புதிய நோட்டுகளை அச்சடிக்க வேண்டி இருக்கிறது. எனவே, தாளில் கரன்சிகளை அச்சிட்டும் முறையை நிறுத்தி விட்டு, பிளாஸ்டிக் ரூபாய்களை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
தற்போது புழக்கத்தில் உள்ள 50, 100, 500 ரூபாய் தாள்களை மாற்றி, புதிய பாலிமர் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.
பொருளாதாரத்தின் முதுகெலும்பு கரன்சிகள்
நம் கையில் இருக்கும் ரூபாய் நோட்டு வெறும் பணப் பரிவர்த்தனைக்கான கருவி மட்டு கிடையாது. நமது நாட்டின் பொருளாதார அடையாளமாக திகழ்ந்து வருகின்றன.
UPI மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், பணத்திற்கான தேவை இன்றுவரை குறையவில்லை. .
கள்ள நோட்டுகள் ஒழிக்கப்படும்
RBI ஆலோசனைக் கூட்டங்களில் பாலிமர் நோட்டுகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. பணத்திற்கான தேவை அதிகரிப்பு, நோட்டுகள் சீக்கிரம் கிழிந்து போவது, கள்ள நோட்டுகளைத் தடுப்பது போன்ற பல பிரச்சனைகளுக்கு இந்த பிளாஸ்டிக் நோட்டுகள் தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கியின் சுமை
இந்தியாவில் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் கைமாறுகின்றன. ஒரே நோட்டு பலரால் பயன்படுத்தப்படுவதால், காகித நோட்டுகள் சீக்கிரமே கிழிந்து, அழுக்காகிவிடுகின்றன.
இப்படி கிழிந்த நோட்டுகளை மீண்டும் மீண்டும் அச்சிடுவது அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் பெரும் செலவை ஏற்படுத்துகிறது. இதற்கு பாலிமர் நோட்டுகள் ஒரு சிறந்த மாற்றாகக் கருதப்படுகிறது.
நீண்டகாலம் உழைக்கும் பிளாஸ்டிக் நோட்டுகள்
பிளாஸ்டிக் நோட்டுகள் சாதாரண காகித நோட்டுகளை விட சுமார் இரண்டரை மடங்கு அதிக காலம் உழைக்கும். தண்ணீர், ஈரம், தூசியால் எளிதில் பாதிக்கப்படாது.
மேலும், இந்த நோட்டுகளைப் போலியாகத் தயாரிப்பது மிகவும் கடினம். இந்தியாவில் கள்ள நோட்டுப் புழக்கம் அதிகமாக உள்ளதால், பிளாஸ்டிக் நோட்டுகள் சரியான தேர்வாக இருக்கும்.
பிளாஸ்டிக் நோட்டுகளை ஏடிஎம் இயந்திரங்களிலும் பயன்படுத்த முடியும். இதற்காக, இயந்திரங்களில் பணம் வைக்கப்படும் பெட்டிகளை, சீரமைக்க வேண்டி இருக்கும். எனவே, இந்த நோட்டுகள் புழக்கத்தில் வந்தால், எந்த பாதிப்பும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
60 நாடுகளில் பிளாஸ்டிக் கரன்சி
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வியட்நாம், ருமேனியா, புருனே, பப்புவா நியூ கினியா உட்பட சுமார் 60 நாடுகள் பிளாஸ்டிக் நோட்டுகளைப் பயன்படுத்துகின்றன.
ஆனால், உலகின் பிரபலமான கரன்சியான அமெரிக்க டாலர் இன்னும் முழுமையாக பிளாஸ்டிக்கிற்கு மாறவில்லை. அமெரிக்க நோட்டுகள் பருத்தி மற்றும் லினன் கலவையால் தயாரிக்கப்படுகின்றன.
இந்தியாவில் பிளாஸ்டிக் நோட்டுகள் அறிமுகமானால், எலைட் நாடுகளின் பட்டியலில் நாமும் இணைவோம்.
====