

ஈரான் போர்
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி தொடங்கியது. பதிலடி கொடுத்த ஈரான், தனது கடல் பகுதியில் உள்ள ஹார்முஸ் ஜலசந்திக்கு சீல் வைத்தது.
உச்சத்தில் கச்சா எண்ணெய்
இதனால் உலக அளவில் 25% அளவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் ஸ்தம்பித்தது. விலையும் 150 டாலர் வரை உயர உலக நாடுகள் பெரும் பாதிப்பை சந்தித்தன.
முடிவுக்கு வந்த போர்
இந்நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் சில நாட்களுக்கு முன்னர் கையெழுத்தானது. இதையடுத்து அடுத்த 60 நாட்களுக்கு ஹார்முஸ் ஜலசந்தியில் சுதந்திரமாகக் கப்பல்கள் செல்லலாம் என்று ஈரான் அறிவித்தது.
பத்திரமாக கடந்த இந்திய கப்பல்கள்
இந்நிலையில், இந்திய தேசியக் கொடி ஏற்றிய தேஷ் வைபவ், தேஷ் விபார், சன்மார் ஹெரால்டு ஆகிய 3 கப்பல்கள் ஒரே நாளில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்தன.
8.6 லட்சம் டன் கச்சா எண்ணெய்
மொத்தம் 8.6 லட்சம் டன் கச்சா எண்ணெய் ஏற்றிக் கொண்டு அந்தக் கப்பல்கள் பாதுகாப்பாக ஜலசந்தியை கடந்துள்ளன. இருதரப்புக்கும் இடையில் போர் தொடங்கிய பிறகு, இந்திய தேசியக் கொடியுடன் ஒரே நாளில் 3 கப்பல்கள் கடந்துள்ளது இதுவே முதல் முறை.
இந்த கப்பல்களையும் சேர்த்து இதுவரை 13 இந்தியக் கப்பல்கள், 5 வெளிநாட்டு கப்பல்கள்ஹோர்முஸ் ஜலசந்தியை கடந்துள்ளன.
கடல் பாதுகாப்புக்கு முன்னுரிமை
இதுகுறித்து மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்வானந்த சோனோவல் கூறும்போது, ‘‘இந்திய தேசியக் கொடி ஏற்றிய அந்த 3 கப்பல்களிலும் மொத்தம் 94 இந்தியர்கள் பணிபுரிகின்றனர். கடல் பாதுகாப்பு, இந்திய மாலுமிகளின் பாதுகாப்புக்கு மத்திய அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது’’ என்றார்.
காத்திருக்கும் 2 கப்பல்கள்
இந்தக் கப்பல்கள் இந்தியாவில் உள்ள துறைமுகங்களை அடுத்தடுத்து வந்தடையும். இதற்கிடையில், எஸ்எஸ்எல் காவேரி, தேஷ் சுரக் ஷா ஆகிய 2 இந்தியக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்க காத்திருக்கின்றன
15 கப்பல்களில் கச்சா எண்ணெய்
இந்தியாவுக்கு வரவேண்டிய 31 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் காத்திருக்கின்றன. அந்தக் கப்பல்களும் ஒவ்வொன்றாக ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் 16 கப்பல்களில் உரங்கள் உள்ளன.
=======