

இனி தங்கம் வாங்கி வரலாம்
Gold Purchase In Dubai To India Limit : பொதுவாக, இந்தியாவை விட துபாயில் தங்கம் விலை குறைவாக இருக்கும். இதனால் இந்தியர்கள் துபாய்க்கு செல்லும்போது அதிகமாக விரும்பி வாங்கக்கூடிய பொருளாக தங்கம் உள்ளது.
பெரும்பாலும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் ரீதியாக இந்தியர்கள் துபாய்க்கு செல்கின்றனர்.
துபாய் தங்கத்திற்கு கிராக்கி
அப்போது இந்தியாவை விட விலை குறைவாக இருப்பதால் அவர்கள் தங்கத்தை வாங்கி வருவார்கள். ஆனால், அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன.
இதை தளர்த்த மத்திய அரசிடம் இந்தியர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில், தற்போது அந்த வரம்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
எளிதாக தங்கம் கொண்டு வரலாம்
அந்த வகையில், இனி துபாயில் இருந்து இந்தியாவிற்கு எவ்வளவு தங்கம் கொண்டு வரலாம் என்ற வரையறை தற்போது வகுக்கப்பட்டுள்ளது.
வரியின்றி நகைகள் இறக்குமதி
மத்திய அரசு custom baggage rule எனப்படும் விதிமுறைகளை மாற்றியமைத்து இருக்கிறது. இதில் பழைய மதிப்பீட்டு வரம்புகள் நீக்கப்பட்டுள்ளன.
இனி தங்கத்தின் எடை அடிப்படையில் மட்டுமே வரி விதிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் அல்லது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வரியின்றி நகைகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் வரம்புகளை நிர்ணயித்துள்ளது.
சுங்க வரி செலுத்தாமல் கொண்டு வரலாம்
மேலும், பெண் பயணிகள் 40 கிராம் வரை எடையுள்ள நகைகளையும், ஆண் பயணிகள் 20 கிராம் வரை எடையுள்ள நகைகளையும் சுங்க வரி செலுத்தாமல் கொண்டு வரலாம்.
புதிய விதிகள் நகைகளை மட்டுமே குறிப்பிடுகின்றன. எனவே, அது தங்க நகைகள் அல்லது வெள்ளி நகைகளாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய விதிகளின்படி, பெண்கள் 40 கிராம் வரை தங்கம் கொண்டு வரலாம். ஆனால் அதன் மதிப்பீட்டு வரம்பு ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டுமே இருக்க வேண்டும்.
அதேபோல், ஆண்கள் 20 கிராம் வரை தங்கம் கொண்டு வரலாம். அதன் மதிப்பீட்டு வரம்பு 50,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும் என்று இருந்தது.
2026 ஆம் ஆண்டு பட்ஜெட்டின் படி விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது
நீங்கள் பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிக எடையுள்ள நகைகளை எடுத்துச் சென்றால், புதிய அல்லது பழைய தனிப்பட்ட நகைகளின் எடை மற்றும் உங்கள் சாமான்களில் உள்ள நகைகளின் மொத்த எடையை தனித்தனியாக அறிவிக்க வேண்டும்.
ஆனால், இந்த பட்ஜெட் 2026 மூலம் பயணிகளின் வசதிக்காக இந்த விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. விமான நிலையங்களில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமத்தைக் குறைக்கவும், தேவையற்ற பொருட்களைத் தடுத்து வைக்காமல் தெளிவுபடுத்தவும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
பிப்ரவரி 2 ஆம் தேதி முதல் அமல்
இந்தியாவிற்குள் சில பொருட்களை இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடை செய்துள்ளது. இந்தியாவின் எல்லைகளை தவறாக சித்தரிக்கும் வரைபடங்கள் அல்லது புத்தகங்கள், போதை மருந்துகள், அறிவுசார் சொத்துரிமைகளை மீறும் பொருட்கள் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டுள்ளன.
போலி இந்திய நாணயத்தாள்கள் மற்றும் நாணயங்கள் மற்றும் சில வகையான பறவைகள் மற்றும் விலங்குகளை இறக்குமதி செய்வதும் குற்றமாகும்.
இந்த புதிய விதிகள் பிப்ரவரி 2, 2026 முதல் அமலுக்கு(Gold Buying From Dubai Rules in India) வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.