

மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டி
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2026 மகளிர் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி உலகையே வியப்பில் ஆழ்த்தியது.
நடப்புச் சாம்பியனான இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சாதனை அளவாக 8-வது முறையாக ஆசியக் கோப்பையை வென்றது.
2024 இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்தப் போட்டியின் மூலம் இந்தியா முழுப் பழிதீர்த்துக் கொண்டது.
தொடக்க வீராங்கனைகள் அபாரம்
ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி முதலில் பேட் செய்து, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை எடுத்தது.
இலங்கைக்கு கடும் நெருக்கடி
தொடக்க ஆட்டக்காரர்களான ஷஃபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை அளித்தனர்.
அவர்கள் வெறும் 12.5 ஓவர்களில் முதல் விக்கெட்டுக்கு 129 ரன்கள் சேர்த்து, இலங்கை பந்து வீச்சாளர்களுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்தனர்.
ஷஃபாலி வர்மா 68 ரன்கள்
ஷஃபாலி வர்மா தொடக்கத்திலிருந்தே இலங்கை கேப்டன் சமரி அட்டபட்டுவின் பந்துவீச்சைத் தாக்கினார். ஒரே ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து அவர் ஆட்டத்திற்கு அடித்தளமிட்டார்.
அவர் தனது அரைசதத்தை வெறும் 24 பந்துகளில் நிறைவுசெய்து, ஆசியக் கோப்பை வரலாற்றிலேயே அதிவேக அரைசதம் என்ற சாதனையைப் படைத்தார். மொத்தத்தில், ஷஃபாலி 39 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தார்.
ஸ்மிருதி மந்தனா 59 ரன்கள்
மறுபுறம், ஸ்மிருதி மந்தனா தனது சிறப்பான ஷாட்களால் 39 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து இலங்கை பந்து வீச்சை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.
ரிச்சா கோஷ் 17 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், அதே நேரத்தில் தீப்தி ஷர்மா 5 ரன்கள் எடுத்தார்.இறுதியில் குணலன் கமாலினி வெறும் 5 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ஜொலித்ததால், இந்தியா 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் என்ற பிரம்மாண்டமான ஸ்கோரை பதிவு செய்தது.
இலங்கை பந்துவீச்சாளர்களில், மிதாலி அயோத்யா, சமரி அட்டபட்டு மற்றும் சாமுடி பிரபோத தல ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
சுழலில் சுருண்ட இலங்கை
184 ரன்கள் இலக்கைத் துரத்திய இலங்கை அணி, கேப்டன் சமரி அட்டபட்டு (36) மற்றும் விஷ்மி குணரத்ன (20) ஆகியோரின் 58 ரன் பார்ட்னர்ஷிப் மூலம் ஆரம்பத்தில் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றது.
10வது ஓவரில் தீப்தி சர்மா தாக்கினார். அவர் அட்டபட்டுவை ஸ்டம்பிங் செய்தது மட்டுமல்லாமல், அதே ஓவரில் குணரத்னவையும் போல்ட் ஆக்கி, ஆட்டத்தை இந்தியாவிற்கு சாதகமாகத் திருப்பினார்.
பின்னர் களமிறங்கிய இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரீ சரணி, இலங்கை அணியின் மத்திய மற்றும் கீழ் வரிசைக்கு ஈடுசெய்ய முடியாத அடியைக் கொடுத்தார்.
சரணி தனது 4 ஓவர்களில் வெறும் 20 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணி தோல்வியை நோக்கி நெருக்கித் தள்ளினார்.
இலங்கை பேட்ஸ்மேன்கள் நீலாக்ஷி டி சில்வா (22), இமேஷா துலானி (4), ஹர்ஷிதா சமரவிக்ரம (9), கவிஷா தில்ஹாரி (7), ஹசினி பெரேரா (1), கௌஷினி நுத்யங்கனா (9) ஆகியோர் பெவிலியன் திரும்பினர். இதனால் இலங்கை அணி 20 ஓவரில் 111 ரன்களுக்கு சுருண்டது.
இந்திய பந்துவீச்சாளர்களில், ஸ்ரீ சரணி 4 விக்கெட்டுகளையும், தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். கிராந்தி கௌட், ஷெஃபாலி வர்மா மற்றும் பிரேமா ராவத் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.
72 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரம்
அபாரமாக விளையாடிய இந்திய மகளிர் அணி, 72 ரன்கள் என்ற மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஆசியக் கோப்பையில் மீண்டும் ஒருமுறை தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டியது.
பழிதீர்த்த இந்தியா
2024 ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கையிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டது இந்தியா.
======================