

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்
இந்தியா உட்பட 74 நாடுகள் பங்கேற்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 23ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டிக்கான ஸ்காட்லாந்து ரூ.2000 கோடி செலவிட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஓருமுறை நடத்தப்படும் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் 1930-ம் ஆண்டு தொடங்கியது.
இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் கொடி
இந்த போட்டியின் நிறைவு விழாவின்போது, 2030ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை நடத்த உள்ள இந்தியாவின் ஆமதாபாத்திடம் விளையாட்டுக்குரிய கொடி ஒப்படைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
3,000 வீரர்கள் பங்கேற்பு
ஏறக்குறைய 3000 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ளும், இந்த போட்டியில் தடகளம், பளுதூக்குதல், குத்துச்சண்டை, நீச்சல், கூடைப்பந்து (3x3), ஜிம்னாஸ்டிக்ஸ், சைக்கிளிங் உள்ளிட்ட 10 விளையாட்டுகளில் 215 பந்தயங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் பாரா பிரிவினருக்கான 6 பந்தயங்களும் அடங்கும்.
இந்தியா சார்பில் 126 பேர் பங்கேற்பு
இந்த ஆண்டு இந்தியா சார்பில் 78 வீரர்கள், 48 வீராங்கனைகள் என மொத்தம் 126 பேர் கொண்ட அணி 8 விளையாட்டுகளில் களம் காணுகிறது.
2002ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து பதக்கப்பட்டியலில் டாப்-5 இடத்திற்குள் இருந்து வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் என 61 பதக்கங்களை வென்று 4-வது இடத்தை பிடித்தது.
ஜாண்டு குமார் - வெண்கலம்
காமன்வெல்த் போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பளுதூக்குதல் பிரிவில் இந்தியாவின் ஜாண்டு குமார் (Jandu Kumar)(வயது 28) வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவின் பதக்கக் கணக்கை தொடங்கி வைத்தார்.
பளுதூக்குதல் போட்டிகள்
ஆண்களுக்கான 60 கிலோ பளுதூக்குதல் பிரிவு மற்றும் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.
ரிஷிகாந்த சிங் சனம்பம் வெள்ளிப் பதக்கம்
ஆண்களுக்கான 60 கிலோ பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீரர் ரிஷிகாந்த சிங் சனம்பம் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
'ஸ்னாட்ச்' பிரிவில் 121 கிலோ மற்றும் 'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 143 கிலோ என மொத்தம் 264 கிலோ எடையை அவர் தூக்கினார்.
மலேசியாவின் முகமது அனிக் பின் கஸ்தான், 273 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார். 260 கிலோவுடன் கென்யாவின் ஜோசுவா அமுங்கா எம்போயா வெண்கலப் பதக்கம் வென்றார்.
மீராபாய் சானு அசத்தல்
இரட்டை சாம்பியனான இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு, பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் இறுதிப்போட்டியில் தங்கம் வென்று அசத்தி உள்ளார்.
இவர் ஸ்னாட்ச் (snatch) பிரிவில் 74 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் (clean and jerk) பிரிவில் 94 கிலோ என மொத்தம் 168 கிலோ எடையைத் தூக்கி, பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
போட்டி முழுவதும் மீராபாயின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. மொத்தம் 168 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்ற நைஜீரியாவின் ரூத் அசுக்குவோ நியாங்கை விட, 22 கிலோ கூடுதல் எடையுடன் மீராபாய் முதலிடம் பிடித்தார்.
3வது முறை தங்கம் வென்று சாதனை
ஒலிம்பிக் பதக்கம் வென்ற மீராபாய் சானு ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ எடையைத் தூக்கி புதிய காமன்வெல்த் சாதனையைப் படைத்தார். மீராபாய் சானு ஏற்கனவே 2018 மற்றும் 2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக வீரருக்கு வெள்ளிப் பதக்கம்
ஆடவர் 65 கிலோ பளுதூக்குதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய வீரரான ராஜா முத்துப்பாண்டி.
286 கிலோ எடையை தூக்கினார்
அவர் மொத்தமாக 286 கிலோவைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஸ்னாட்ச் முறையில் 126 கிலோவையும், க்ளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 160 கிலோவையும் தூக்கி, தனது பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளி வென்றார்.
மலேசிய வீரர் பின் பிடின் (299 கிலோ) தங்கமும், பப்புவா நியூ கினியின் மொரியா (282 கிலோ) வெண்கலமும் வென்றனர்.
2018 காமன்வெல்த் போட்டியில் 6ம் இடத்தை பிடித்து இருந்த ராஜா முத்துப்பாண்டி, பின்னர் காயம், சிகிச்சை காரணமாக போட்டிகளில் பங்கேற்கவில்லை.
இந்தமுறை மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய அவர் வெள்ளி வென்று இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.
==================