

இந்தியவின் சார்வில் விண்வெளியில் ஆய்வு நிலையம்
BAS isro உலக நாட்டின் விண்வெளி ஆய்வுக்கென பிரத்யேகமாக, ஐ.எஸ்.எஸ்., எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. இதை அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட ஐந்து நாடுகள் நிர்வகிக்கின்றன. இந்நிலையில், இந்திய நாட்டின் சார்பில் தனி விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கும் திட்டத்தை இஸ்ரோ முன்னெடுத்தது. இந்த விண்வெளி நிலையத்துக்கு பி.ஏ.எஸ்., எனப்படும் பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் என, பெயரிடப்பட்டுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்டில், தேசிய விண்வெளி தினத்தில் இந்தியா சார்பில் விண்வெளியில் அமைக்கப்பட உள்ள ஆய்வு நிலையத்தின் மாதிரி அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது அதன் வடிவமைப்பு பணி துவங்கி உள்ளதாகவும், 'பி.ஏ.எஸ்., --1' என்ற அதன் முதல் பகுதி, 2028ல் விண்ணில் ஏவுவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரோ அதிகாரிகள் தகவல்
இது குறித்து, இஸ்ரோ அதிகாரிகள் கூறியதாவது: பி.ஏ.எஸ்., என்பது இந்தியாவின் சொந்த விண்வெளி ஆய்வகம். விண்வெளி அறிவியல், உயிரியல், மருத்துவம், கோள் ஆய்வுகள் போன்றவற்றுக்கு பயன்படும்.
இதன், 'பி.ஏ.எஸ்., - 1' எனப்படும் முதல் பகுதி, 10,000 கிலோ எடை உடையது. பூமியில் இருந்து 450 கி.மீ., உயரத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளது. இதை உருவாக்க விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் சார்பில், ஆர்வமுள்ள விண்வெளி நிறுவனங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தற்போது இந்த திட்டம் முழு வீச்சில் அடுத்த கட்டத்தை எட்டி வருவதால், 2028 ல் திட்டமிட்டபடி விண்வெளி நிலையத்தில் அதன் முதல் பகுதி விண்ணில் நிலைநிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
================