

கரூர் நெரிசல் சம்பவம்
TVK chief Vijay appear before Delhi CBI Office over Karur stampede case : கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி நடைபெற்றது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கரூர் சம்பவம் - சிபிஐ விசாரணை
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரித்து வருகிறது. பல்வேறு தரப்பினரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக நிர்வாகிகளிடம் நவ.24. 25-ம் தேதிகளில் விசாரணை நடைபெற்றது.
கரூரில் சிபிஐ குழு ஆய்வு
சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித்சரண் ஆகியோர் டிச.2, 3-ம் தேதிகளில் கரூர் வந்து விசாரணை குறித்து ஆய்வு செய்தனர். மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், ஐ.ஜி.ஜோஷி நிர்மல்குமார், எஸ்.பி. ஜோஷ் தங்கையாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
விஜய்க்கு சிபிஐ சம்மன்
இந்நிலையில், டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தவெக தலைவர் விஜய்க்கு சிபிஐ கடந்த ஜன.6ம் தேதி சம்மன் அனுப்பியது. 12ம் தேதி ( இன்று ) ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
டெல்லியில் நடிகர் விஜய்
இதற்காக இன்று காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் விஜய் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் அவருடன் சென்றிருக்கிறார்கள்.
3 நாட்கள் விசாரணை?
விஜயிடம் 3 நாட்கள் விசாரணை நடத்தப்பட்ட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக, கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர். நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகளிடம் ஏற்கெனவே சுமார் 20 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு
கரூர் வழக்கை தமிழக காவல் துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று தொடக்கத்தில் தவெகதான் கோரிக்கை விடுத்திருந்தது. எனவே, சிபிஐ சம்மனை தவிர்ப்பது சரியாக இருக்காது, என்பதால் தான் விஜய் நேரில் ஆஜரானதாகவும், சிபிஐ விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளிப்பார்” என்றும் தவெக தரப்பினர் தெரிவித்தனர்.
50 கேள்விகளுடன் சிபிஐ அதிகாரிகள்
விஜயிடம் கேட்பதற்காக 50-க்கும் மேற்பட்ட முக்கியமான கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் தயார் செய்துள்ளனர். விசாரணை முடிந்த பிறகு, சிபிஐ தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. விஜயின் டெல்லி வருகையை ஒட்டி, அவருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
==============