

முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சியின் போது டெல்லியில், 12,748 வகுப்பறைகள் கட்டப்பட்டன.
இது தொடர்பாக ஊழல் தடுப்புப் பிரிவு நடத்திய விசாரணையில் 2 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் ஊழலில் தொடர்புடைய 322 வங்கிக் கணக்குகள் கண்டறியப்பட்டு உள்ளன.
இதுபற்றி அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ரூ.5 லட்சத்தில் ஒரு வகுப்பறையை கட்ட முடியும்.
ஆனால் ஆம் ஆத்மி அரசு ஒரு வகுப்பறைக்கு ரூ.24.86 லட்சத்தை செலவு செய்ததாக கணக்கு காட்டியிருக்கிறது.
மேலும் 1,214 கழிப்பறைகளை, வகுப்பறைகளாக கணக்கு காட்டி உள்ளனர்.
அந்த வகையில், ரூ.2,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருக்கிறது.
வகுப்பறைகள் கட்ட ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட நிறுவனங்கள், ஆம் ஆத்மியின் பினாமிகள் என்பதும், முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
வகுப்பறை ஊழல் விவகாரம் தொடர்பாக முன்னாள் கல்வி அமைச்சர் மணீஷ் சிசோடியா, முன்னாள் பொதுப் பணித் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
=====