
இந்தியா-இங்கிலாந்து நட்புறவு :
PM Modi Sign India And UK Free Trade Agreement : இந்தியா - இங்கிலாந்து இடையே பல ஆண்டுகளாக நல்லுறவு நீடித்து வருகிறது. ஏற்றுமதி, இறக்குமதியில் இருநாடுகளுக்கு இடையேயான புரிதலும் சிறப்பாக உள்ளது. நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசு முறைப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். தலைநகர் லண்டனில் நேற்று அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இருநாட்டு பிரதமர்கள் பேச்சுவார்த்தை :
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டாமரை சந்தித்து பேசினார். இந்தியா-இங்கிலாந்து இடையிலான(India UK Relations) இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். அப்போது இருநாடுகள் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் :
அதன் ஒருபகுதியாக, வரலாற்று சிறப்பு மிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதன்மூலம், இந்தியா-இங்கிலாந்து இருதரப்பு வர்த்தகம், ஆண்டுக்கு 2.4 லட்சம் கோடியாக அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது. வர்த்தக ஒப்பந்தத்தால் 90% வர்த்தகத் தடைகள் நீக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்கும் :
தடையற்ற வர்த்தகம் மூலம் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து ஜவுளி, காலணி, தோல் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கும். இதன் மூலம் இருநாடுகளும் பயன்பெறும். மேலும் இந்திய பொருட்களுக்கு இங்கிலாந்து விதிக்கும் வரி 15 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறையும்.
இங்கிலாந்து பொருட்களுக்கான வரி குறையும் :
இதேபோன்று, இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் விஸ்கி போன்ற மதுபானங்களுக்கு விதிக்கப்படும் வரி 150 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறையும். வர்த்தக ஒப்பந்தத்திற்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும். எனவே, இது அமலுக்கு வர 12 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரை ஆகலாம். இங்கிலாந்து பயணத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டு மன்னர் சார்லசையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.
=====