’பெரும்பிடுகு முத்தரையருக்கு’ அஞ்சல் தலை : கௌரவித்த மத்திய அரசு
முத்தரையர் ஆட்சி
Perumbidugu Mutharaiyar II Postage Stamp : திருச்சிராப்பள்ளியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த முத்தரையரின் ஆட்சிக் காலம், வலிமையான நிர்வாகம், நிலப்பரப்பு விரிவாக்கம், கலாச்சார ஆதரவு மற்றும் படை வலிமை ஆகியவற்றுக்கு சான்றாக திகழ்கிறது.
பெரும்பிடுகு முத்தரையர்
கி.பி. 705 முதல் 745 வரை தஞ்சாவூரை ஆட்சி செய்த முத்தரைய அரச குலத்தைச் சேர்ந்த அரசர் பெரும்பிடுகு முத்தரையர், சுவரன் மாறன், குவாவன் மாறன் என்றும் அறியப்படுகிறார். தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி பகுதிகளை ஆட்சி செய்த இவர், நந்திவர்மனின் முடிசூட்டு விழாவில் கலந்து கொண்டார்.
வீரமும், அருளும் நிரம்பியவர்
நந்திவர்ம பல்லவனுடன் சேர்ந்து பாண்டிய, சேர படைகளை எதிர்த்து பன்னிரண்டு போர்களை கண்டவர் பெரும்பிடுகு முத்தரையர். 12 இடங்களிலும் வாகை சூடி எதிரிகளை மண்ணை கவ்வச் செய்தார். வீரத்தின் விளை நிலமாக இருந்தாலும், கொடை கொடுப்பதில் இவருக்கு நிகரில்லை என்று கல்வெட்டுகள் கூறுகின்றன.
முத்தரையர் உருவச்சிலை
1996ம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சார்பில் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, திருச்சி நகரில் இவரது சிலையை நிறுவினார். 2022ம்ம் ஆண்டிலிருந்து, இவரது பிறந்தநாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு
பெரும்பிடுகு முத்தரையரை கௌரவிக்கும் விதமாக சிறப்பு அஞ்சல் தலை வெளியிடப்படும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. அதன்படி, டெல்லியிலை நடைபெற்ற துணை ஜனாதிபதி இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசு துணைத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் அஞ்சல் தலையை வெளியிட்டார்.
மத்திய அரசுக்கு பாராட்டு
நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு இந்திய அரசு, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதைப் பாராட்டினார். 'காசி தமிழ் சங்கமம்' போன்ற முன் முயற்சிகளையும், கடந்த காலத்தில் உரிய அங்கீகாரம் பெறாத தமிழ் மன்னர்கள், தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை அங்கீகரித்து கௌரவிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சிகளையும் அவர் வெகுவாகப் பாராட்டினார்.
முத்தரையரின் வரலாற்று முக்கியத்துவம்
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலை வெளியிட்டது, இந்த அங்கீகாரச் செயல்பாட்டின் ஒரு பகுதியே என்று துணை குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார். பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் வரலாற்று முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், பண்டைய தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர் என்று கூறினார்.
தமிழ்நாட்டின் பல இடங்களில் காணப்படும் கல்வெட்டுகள், கோவிலுக்கு அளித்த கொடைகள், நீர்ப்பாசனப் பணிகள் மற்றும் தமிழ் இலக்கியத்திற்கு அவர் அளித்த பங்களிப்புகளுக்குச் சான்றாக உள்ளன என்றும், அவரது ஆட்சி தென் இந்திய வரலாற்றில் ஒரு தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது என்றும் துணை குடியரசுத் தலைவர் பாராட்டு தெரிவித்தார்.
=====

