
தங்கமகன் நீரஞ் சோப்ரா
Olympic gold medallist javelin thrower Neeraj Chopra conferred honorary rank of Lieutenant Colonel in Indian Army : ஈட்டி எறிதலில், உலக அளவில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து வருபவர் நீரஜ் சோப்ரா. 2020ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகளத்தில் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய தடகள வீரர் என்ற வரலாற்றைப் படைத்தார் நீரஜ் . 2024ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கத்தையும், 2023ம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்தார்.
பதக்கங்களுக்கு பெருமை சேர்த்தவர்
ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு மற்றும் டயமண்ட் லீக் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் நீரஞ் சோப்ரா. ஈட்டி எறிதல் போட்டியில், 90.23 மீட்டர் (2025ம் ஆண்டு ) எறிந்து இந்திய விளையாட்டு வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையை படைத்தவர்.
தேசிய விருதுகள் பெற்ற நீரஞ்
2016ம் ஆண்டு நீரஜ் சோப்ரா ஜூனியர் கமிஷன்டு அதிகாரியாக இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். முன்னதாக, நீரஜ் சோப்ராவுக்கு பத்மஸ்ரீ, மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது, பரம் விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் விஷிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டது.
கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி
இந்தநிலையில், இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினன்ட் கர்னல் பதவி அவருக்கு வழங்கப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ராஜ்நாத் சிங் பாராட்டு
நீரஜ் சோப்ராவின் சாதனைகளை பாராட்டி பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 'வருங்கால சந்ததியினருக்கு நீரஜ் சோப்ரா ஒரு உத்வேகமாக இருக்கிறார். ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் தேசிய பெருமை ஆகிய உயர்ந்த கொள்கைகளை உள்ளடக்கியவர். விளையாட்டு மற்றும் ஆயுதப்படையில் உள்ள இளைய தலைமுறையினருக்கு நீரஜ் சோப்ரா உத்வேகமான சேவையை செய்து வருகிறார்’ என்று தெரிவித்தார்.
=============