

செயற்கை நுண்ணறிவு துறைகளில் 23 லட்சம் வேலைவாய்ப்புகள்
Army Chief Upendra Dwivedi on Operation Sindoor 2.0 : டில்லியில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திரா திவேதி சில கருத்துக்களை முன்வைத்தார். அதாவது, வரும் 2027ம் ஆண்டிற்குள் செயற்கை நுண்ணறிவு தொடர்பான துறைகளில் 23 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் திறமை வாய்ந்தவர்கள் அதில் பாதி மட்டுமே இருப்பார்கள். இந்திய ராணுவத்திற்கு இந்தத் தேவையை அவுட்சோர்ஸ் செய்ய வேண்டுமென்றால், அதன் செலவு மிக அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
பாதுகாப்பு கொள்முதல் கையேடு
மேலும், இதனை நாம் இன்றே தொடங்குவது முக்கியம் என்றும் இந்திய ராணுவம் மற்றும் பள்ளிகளுக்கு ஏஐ நிபுணர்கள் தேவை. ஏனெனில் தேவை அதிகமாகவும், திறமை குறைவாகவும் இருக்கிறது. முப்படைகளுக்கு தேவையான பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கான கொள்கைகளைக் கொண்ட பாதுகாப்பு கொள்முதல் கையேடு, இந்த மாதம் வெளியிடப்பட்டது என்று கூறினார்.
2.1 லட்சம் கோடியை முதலீடு, பெரிய சவால்
தொடர்ந்து பேசிய அவர், பாதுகாப்புத்துறையை மேம்படுத்தும், உள்நாட்டு தற்சார்பை அதிகரிக்கும் நடைமுறை வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
டிசம்பர் மாதத்திற்குள் அனைத்தையும் இறுதி செய்து விடுவோம். அரிதான பொருட்களை குறைந்தபட்சம் அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு இறக்குமதி செய்யப்பட வேண்டியிருக்கும். 2019ம் ஆண்டு முதல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக மட்டும் 2.1 லட்சம் கோடியை இந்திய ராணுவம் முதலீடு செய்துள்ளது. இது ஒரு பெரிய சவால். நாங்கள் பொறுமையாக, படிப்படியான வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ளோம் என்று கூறினார்.
6ஜி திட்டங்களிலும் இணைந்து பணியாற்றுகிறோம்
மேலும், நமது பாரம்பரிய அமைப்புகளை உடனடியாக மாற்ற முடியாது. அதனை மாற்ற குறைந்தபட்சம் 5 அல்லது 7 ஆண்டுகள் ஆகலாம். மாற்றங்கள் மூலம் அதனை சக்திவாய்ந்ததாக மாற்ற வேண்டும். தேசிய அளவிலான திட்டங்களுடன் நாங்கள் ஒருங்கிணைந்து பயணிக்கிறோம்.
இந்தியா ஏஐ திட்டத்தில் நாங்கள் ஏற்கனவே கையெழுத்திட்டு விட்டோம். அதேபோல, விண்வெளி, குவாண்டம் மற்றும் 6ஜி திட்டங்களிலும் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம். திறந்த மூல பகுப்பாய்வு மற்றும் முன்கணிப்பு பகுப்பாய்வு ஆகியவை ஆப்பரேஷன் சிந்தூர் 1.0ல் எங்களுக்கு மிகவும் உதவியது.
எந்தப் போராக இருந்தாலும் தயாராக இருக்கிறோம்
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் எங்களுக்கு உதவினர். ஆப்பரேஷன் சிந்தூர் 1.0ல் நாங்கள் மிகவும் அதிகாரம் படைத்தவர்களாக இருந்தோம். நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டோம். எனவே, ஆப்பரேஷன் சிந்தூர் 2.0 அல்லது வேறு எந்தப் போராக இருந்தாலும், இந்த திட்டங்களை சிறப்பாக பயன்படுத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
===