

கேரள சட்டமன்ற தேர்தல்
140 இடங்களை கொண்ட கேரள சட்டசபைக்கு நடந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும் (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்( யுடிஎஃப்) கடும் போட்டி இருந்தது.
காங்கிரஸ் கூட்டணி
காங்கிரஸ் 95 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 27 தொகுதிகளில் போட்டியிட்டது. இதர தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்பட்டன.
மார்க்சிஸ்ட் கூட்டணி
இதேபோல் இடது ஜனநாயக முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 86 தொகுதிகளில் போட்டியிட்டது. இதர தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 115 தொகுதிகளில் போட்டியிட்டது.
முடிவுக்கு வந்த மார்க்சிஸ்ட் ஆட்சி
தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 97 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. 10 ஆண்டுகால மார்க்சிஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதன்மூலம், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இடதுசாரிகள் இல்லாத ஆட்சி உருவாகி இருக்கிறது.
முதல்வர் பதவி - மூன்று பேர்
கேரள காங்கிரசின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா, எதிர்க்கட்சி தலைவராக இருந்த வி.டி. சதீசன், ராகுலின் வலதுகரமாக கருதப்படும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் ரேசில் இருந்தனர். இவர்களில் யாரை தேர்வு செய்வது என்பதில் ஏற்பட்ட குழப்பம் 10 நாட்களாக நீடித்தது.
முதல்வராகும் சதீசன்
ஒருவழியாக வி.டி. சதீசனை முதல்வராக தேர்ந்து எடுத்த காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. ரமேஷ் சென்னிதாலா சபாநாயகராக தேர்ந்து எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.
கேரளத்தில் 2021 தேர்தலில் மார்க்சிஸ்ட் வெற்றிபெற்று ஆட்சியில் தொடர, எதிர்க்கட்சித் தலைவரானார் சதீசன். இவரது தொடர் உழைப்பால், காங்கிரஸ் இந்த தேர்தலில் ஆட்சியை பிடித்தது. சதீசனின் வியூகங்களே வெற்றியை ஈட்டித் தந்தது.
செல்வாக்கு மிக்க சதீசன்
அதன் அடிப்படையில் அவருக்கு முதல்வர் பதவியை பரிசாக வழங்கி இருக்கிறது காங்கிரஸ் தலைமை. கேரள மக்களிடம் செல்வாக்கு மிக்க தலைவராக இருப்பவர் சதீசன். அவர் ஓரிரு நாட்களில் பதவியேற்பார் எனத் தெரிகிறது.
=========================