
சிறுவயதிலேயே வறுமை வாட்டியது :
VS Achuthanandan Passed Away : கேரள அரசியலில் மூத்த தலைவரான வி. எஸ். அச்சுதானந்தன், 1923ம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ம் தேதி ஆலப்புழையில் பிறந்தார். சிறு வயதிலேயே வறுமையை எதிர்கொண்ட அவர், நான்கு வயதில் தாயையும், 11 வயதில் தந்தையையும் இழந்தார். ஏழாம் வகுப்புடன் பள்ளிக் கல்வியை நிறுத்திய அவர், துணிக் கடையிலும், கயிறுத் தொழிற்சாலையும் பணியாற்றினார்.
சுதந்திர போராட்ட வீரர் அச்சுதானந்தன் :
தொழில் சங்க ஈடுபாட்டின் மூலம் அரசியலுக்கு வந்த வி. எஸ். அச்சுதானந்தன்(VS Achuthanandan), 1938ஆம் ஆண்டு மாநில கங்கிரஸில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து வெளியேறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பணியாற்றினார். இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு பெற்ற அவர், 5 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். 1964ம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்று மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய 32 உறுப்பினர்களுள் இவரும் ஒருவர்.
கேரள முதல்வராக அச்சுதானந்தன் :
வி. எஸ். அச்சுதானந்தன் 2006 முதல் 2011 வரை கேரள முதலமைச்சராக அவர் பணியாற்றினார். கேரள அரசியலில் ஒரு சகாப்தமாக திகழ்ந்த அவர், எளிமை, நேர்மை, மக்கள் நலன் மீது கொண்ட அக்கறை ஆகியவற்றின் அடையாளமாகப் போற்றப்பட்டார்.
போராட்டங்களை முன்னெடுத்தவர் :
தனது அரசியல் வாழ்க்கையில் பல போராட்டங்களை முன்னெடுத்தவர். முதிய வயதிலும் அரசியல் அரங்கில் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வந்த அவர், கேரள மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். வி.எஸ். என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்பட்டவர். பல ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக வி. எஸ். அச்சுதானந்தன் இருந்து, கட்சியை வழி நடத்தினார்.
நீண்ட கால எதிர்க்கட்சித் தலைவர் :
கேரள சட்டமன்றத்தில் மிக நீண்ட காலம் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய பெருமை வி. எஸ். அச்சுதானந்தனை சேரும். 15 ஆண்டுகள் அவர் அந்தப் பதவியை வகித்தார். வயது மூப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது.
மேலும் படிக்க : MK Muthu Death : கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து காலமானார்
காலமானார் அச்சுதானந்தன் :
இதையடுத்து மாரடைப்பு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் இன்று பிற்பகல் காலமானார்(VS Achuthanandan Death). அவருக்கு வயது 102.
அப்பழுக்கற்ற அரசியல்வாதி :
அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அச்சுதானந்தனின்(VS Achuthanandan Homage) உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பிறகு, இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
============