
ஆபரேஷன் சிந்தூர் :
Rajnath Singh Speech at Parliament : காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகளுக்கு பாடம் புகட்டும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் துல்லியமாக அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையில் இந்தியாவுக்கு 100 சதவீத வெற்றி கிடைத்தது.
அரசியலாக்கிய எதிர்க்கட்சிகள் :
இதை அரசியலாக்கிய எதிர்க்கட்சிகள் மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று போராட்டங்களை நடத்தின. இதைத்தொடர்ந்து, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தில் விவாதிக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது. 16 மணி நேரம் விவாதம் நடைபெறுகிறது. மக்களவையில் இந்த விவாதத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் துவக்கி வைத்தார்.
மக்களவையில் விவாதம், ராஜ்நாத் பதிலடி :
விவாதத்தை தொடங்கி வைத்து பேசிய ராஜ்நாத் சிங், நமது படைகளால் நடத்தப்பட்ட நன்கு ஒருங்கிணைந்த தாக்குதல்கள், 9 பயங்கரவாத உள்கட்டமைப்பு இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கின. நான் எச்சரிக்கையுடன் பேசுகிறேன், எனவே நமது புள்ளிவிவரங்கள் தவறாக இல்லை. உண்மையான எண்ணிக்கை மிக அதிகம்.
பயங்கரவாதிகள் அழிப்பு :
100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள், அவர்கள் அனைவரும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையவர்கள், அழிக்கப்பட்டனர். பாகிஸ்தானின் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐயிடமிருந்து வெளிப்படையான ஆதரவைப் பெறும் பயங்கரவாத அமைப்புகள் மண்ணோடு மண்ணாகின.
பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் :
இந்தியா தனது அரசியல் மற்றும் ராணுவ நோக்கங்களை அடைந்தது. பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் நடத்தி, ராணுவ மோதலை முடிவுக்கு கொண்டு வந்தோம். இந்தியா அமைதியை விரும்புகிறது. இந்திய படைகளின் பலத்தை சர்வதேச நாடுகள் புரிந்துகொண்டன. ஆபரேஷன் சிந்துார் மூலம் இந்தியா வரலாற்று சாதனை நிகழ்த்தியது.
போரை நிறுத்துமாறு பாக். கோரிக்கை :
ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் நிறைவேறியது. பாகிஸ்தான் முதலில் போர் நிறுத்தம் செய்யக் கோரியது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் பாகிஸ்தானால் தாக்க முடியவில்லை.
தோல்வியுற்ற பாகிஸ்தான் ட்ரோன்கள் :
பாகிஸ்தானின் ட்ரோன்களுக்கு நவீன வான் பாதுகாப்பு மூலம் பதிலடி தந்தோம். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் பதிலடி, தற்காப்பு நடவடிக்கைதான். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, தேவைப்பட்டால் மீண்டும் தொடங்கப்படும். இந்தியாவின் எத்தனை விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என்று எதிர்க்கட்சிகள் கேட்பது வேடிக்கையாக இருக்கிறது. எதிரியின் தோல்வி என்ன என்பது பற்றிதான் நாம் பேச வேண்டும்.
எதிர்க்கட்சிகளுக்கு கடும் கண்டனம் :
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் நமது வீரர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சரியான கேள்விகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் தவறிவிட்டன. நமது வீரர்களின் தீரத்தை உணர்ந்து, பாராட்டவும் அவர்களுக்கு மனமில்லை” இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
===============