
புதிய உச்சங்களை தொடும் தங்கம்
India's jewellery markets sparkled this DIwali, Rs. 85,000 crores sales in Nationwide : சர்வதேச நிலவரம், ரூபாயின் மதிப்பு சரிவு, அமெரிக்காவின் கூடுதல் வரி, மத்திய வங்கிகள், தங்கத்தை வாங்கி குவிப்பது போன்ற காரணங்களால் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. சவரன் விலை ஒரு லட்சத்தை எட்ட இன்னும் சில ஆயிரங்கள் மட்டுமே உள்ளன. எப்போது வேண்டுமானாலும் தங்கம் விலை சவரன் ஒரு லட்சத்தை தொட்டு விடும் என்ற நிலை தான் உள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு
இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்ய 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அறிமுகம் செய்யப்பட்டது. 5%, 12%, 18% மற்றும் 28% என 4 அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி கடந்த மாதம் 22ம் தேதி 5%, 18% என 2 அடுக்குகளாக மாற்றம் செய்யப்பட்டது.
ஜிஎஸ்டி வரி குறைப்பால் லாபம்
இது ஜிஎஸ்டி 2.0 என்றும், நாட்டு மக்களுக்கான தீபாவளிப் பரிசு என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். ஜிஎஸ்டி வரி குறைப்பு காரணமாக பல்வேறு பொருட்களின் விலை குறைந்து இருக்கிறது. கார், ஏசி, வாஷிங் மெஷின், டிவி உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகரித்து உள்ளது.
தங்கம், வெள்ளி விற்பனை அதிகரிப்பு
அந்த வகையில், இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை நாடு முழுவதும் அதிகரித்துள்ளது. வட மாநிலங்களில் 5 நாட்களுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. குறிப்பாக தீபாவளிக்கு 2 நாள் முன்னதாக தந்தேரஸ் விழா கொண்டாடப்பட்டது. . லட்சுமி தேவி அருள் கிடைப்பதற்காக இந்த 2 நாட்களில் தங்கம், வெள்ளி, பொருட்களை புதிதாக வாங்கி வீட்டில் பூஜை செய்வது வழக்கம். அதன்படி, இந்தநாட்களில் தங்கம், வெள்ளி வட இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகி உள்ளன.
85,000 கோடிக்கு தங்கம் விற்பனை
இரண்டு நாட்களில் மட்டும், நாடு முழுவதும் 50 முதல் 60 டன் அளவுக்கு தங்க நகைகள் விற்பனையாகி உள்ளன. இதன் மதிப்பு சுமார் ரூ.85 ஆயிரம் கோடி எனக் கூறப்படுகிறது.கடந்த ஆண்டின் விற்பனையை விட 35 முதல் 40 சதவீதம் ஆகும். ஆனால், விற்பனையான நகையின் அளவைப் பொருத்த அளவில் கடந்த ஆண்டின் அளவிலேயே இருந்தது. இதற்கு கடுமையான விலை உயர்வே காரணம்.
5 நாட்களில் ரூ. ஒரு லட்சம் கோடி!
தீபாவளி பண்டிகை நேற்றுடன் முடிந்து விட்ட நிலையில், கடந்த 5 நாட்களில் தங்கம் விற்பனை 100 முதல் 120 டன்னை எட்டும் என்றும், அதாவது, 1 லட்சம் கோடி முதல் ரூ.1.35 லட்சம் கோடி ரூபாய் அளவு விற்பனை ஆகி இருக்கும் என்று நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வெள்ளி விற்பனை அதிகரிப்பு
இந்த ஆண்டு தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து இருப்பதால், வெள்ளி பொருட்கள விற்பனை அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக வட இந்தியாவில் வெள்ளி பொருட்கள் 2 மடங்கு அளவு விற்பனை ஆகி உள்ளது. வெள்ளி விலையும் உச்சத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
டிவி, பிரிட்ஜ் ரூ.10 ஆயிரம் கோடி
ஜிஎஸ்டி வரி குறைப்பால் இந்த ஆண்டு தீபாவளி காலத்தில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், செல்போன், ஏசி உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் விற்பனை ரூ.10 ஆயிரம் கோடியைத் தாண்டி உள்ளது. மின்னணு சாதனங்களின் தயாரிப்பு, கொள்முதல், விற்பனை அதிகரித்து இருப்பதால், 25 லட்சம் பேர் கூடுதலாக வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
==============