
DMK MPs on BJP MP Nishikant Dubey Speech : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பேசினார். அப்போது இந்தியில் பேசுவதை மொழிபெயர்த்து எம்.பி.க்களின் ஹெட்போன் வழியே ஒலிபரப்பும் கருவி பழுதடைந்தது.
மொழிபெயர்ப்பு அமைப்பில் ஏற்பட்ட இந்த தொழில்நுட்பக் கோளாறால், திமுக எம்.பி.க்கள் அவரை ஆங்கிலத்தில் பேசுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஆங்கிலம் ஒரு அந்நிய மொழி என்று கூறி ஆங்கிலத்தில் பேசுவதற்கு நிஷிகாந்த் துபே மறுத்துவிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர் , நீங்கள் என்னை தமிழ் அல்லது வங்க மொழியில் பேசச்சொன்னால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் ஆங்கிலத்தில் பேசுமாறு கூறுகிறீர்கள். ஆங்கிலம் ஒரு அந்நிய மொழி, நீங்கள் அதை வலியுறுத்துவது உங்கள் மனநிலையைப் பிரதிபலிக்கிறது.
மக்களவையில் ஒருவர் அரை மணி நேரம் வங்க மொழியில் பேசினார். அதற்கு அப்போது தமிழக எம்.பி.க்கள் சிறிது கூட ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. உங்களுக்கு இந்தியில்தான் பிரச்சினை.
காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் வட இந்தியர்களோ அல்லது இந்தியோ பிடிக்காது. நீங்கள் ஆங்கிலத்தை தொடர்ந்து ஊக்குவித்து வந்தால், நாம் இங்கிலாந்துவாசிகளாக மாறிவிடுவோம். நாம் மீண்டும் அடிமைகளாக மாறும் நிலை வந்துவிடும் என்றார். இதனிடையே மக்களவையில் மொழிபெயர்ப்புக் கருவியில் ஏற்பட்டிருந்த தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டது.
மேலும் படிக்க : பாகிஸ்தானின் செய்தித் தொடர்பாளர் காங்கிரஸ் : பிரதமர் மோடி சாடல்
முன்னதாக நிஷிகாந்த் துபே(Nishikant Dubey) பேசும்போது, 1965-ம் ஆண்டு நடந்த போரில் 45 விமானங்களையும், 1971-ம் ஆண்டு நடந்த போரில் 71 விமானங்களையும் இந்திய ராணுவம் இழந்தது. ஆனால், நாங்கள் தேசியவாதிகள் என்பதால் இந்த விஷயத்தை ஒருபோதும் ஒரு பிரச்சினையாக மாற்றவில்லை. ஆனால் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின்போது இந்திய ராணுவத்தின் இழப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் பொய்களைப் பரப்பி வருவது சரியா என்று கேள்வி எழுப்பினார்.