

ஐந்து மாநிலத் தேர்தல்
Candidates can file nominations through Suvidha App Notification of Election Commission Election Nomination Suvidha App : தமிழகம் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு விட்டது. புதுச்சேரி, அசாம், கேரளாவில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி விட்டது. தமிழகத்தில் வரும் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தமிழகத்தில் நான்கு முனைப்போட்டி
தமிழகத்தில் தேர்தல் திருவிழா களை கட்டத் தொடங்கி விட்டது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டியானது உறுதியாகியுள்ளது. தொகுதி பங்கீட்டை முடித்து வேட்பாளர்களை ஒரு வாரத்தில் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம், அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது.
5 நாட்கள் மட்டுமே மனுத்தாக்கல்
மார்ச் 30ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். இதில் 3 நாட்கள் விடுமுறை என்பதால், 5 நாட்கள் தான் வேட்புமனு தாக்கலுக்கு இருக்கிறது.
அலைமோதும் கூட்டம்
எனவே வேட்பு மனு செய்யப்படும் அலுவலகங்களில் வேட்பாளர்களின் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் வேட்புமனு தாக்கல் செய்யும் போது 4பேர் மட்டுமே உடன் வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது.
ஆன்லைனில் வேட்புமனு தாக்கல்
எனவே, வேட்பாளர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் ஆன்லைன் மூலம் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உருவாக்கி இருக்கிறது.
அந்த வகையில், தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் சுவிதா (Suvidha) செயலி மூலம் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் வசதி தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
சுவிதா செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்
தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ள சுவிதா (Suvidha) ஆப் மூலம் தேர்தல் தொடர்பாக பல்வேறு விவரங்களை தெரிந்து கொள்ளவும், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் பிரச்சாரம் செய்ய அனுமதி வாங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த ஆப்பில் புதிய வசதிகள் மேற்கொள்ளப்பட்டு 'சுவிதா 2.0' (Suvidha 2.0) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வேட்பாளர்கள் மொபைலிலேயே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், பிரசாரத்திற்கு அனுமதிச் சீட்டுகளைப் பெறவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
'சுவிதா 2.0'- வேட்புமனு தாக்கல்
ஏற்கனவே, செயல்பாட்டில் இருந்த இந்த வசதி, தற்போது மேலும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் வேட்பாளர்கள் 'சுவிதா 2.0' (Suvidha 2.0) ஆப்பில் வேட்பாளர்கள் தங்கள் மொபைல் எண் மூலம் பதிவு செய்த பிறகு தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவு செய்தால் போதும்.
விவரங்களை சமர்பித்தால் போதும்
அடுத்தாக வேட்பாளர்கள் தொடர்பாக அனைத்து தகவலும் அந்த ஆப்பில் காட்டும். அடுத்தாக வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரம், வழக்கு விவரங்கள் மற்றும் பிரமாணப் பத்திரங்களோடு உரிய ஆவணங்களையும் பதிவேற்றம் செய்து தங்களது வேட்புமனு சமர்பிக்கலாம்.
எனவே, வேட்பாளர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
====================