

இந்தியாவில் நக்சலிசம் ( நக்சல்பாரி ) :
'I can proudly declare India Naxal-free', says Amit Shah : இந்தியாவில் நக்சலிசம் என்ற ஆயுத போராட்டம் 1967ம் ஆண்டில் துவங்கியது. மேற்கு வங்கத்தில் உள்ள ‘நக்சல்பாரி’ (Naxalbari) என்ற கிராமத்தில் விவசாயிகளுக்கும் நில உரிமையாளர்களுக்கும் இடையேயான ஆயுத மோதலில் பிறந்தது தான் நக்சல்பாரி இயக்கம் என்ற நக்சலிசம்.
நக்சலிகம் to மாவோயிசம்
சாரு மஜும்தார், கானு சன்யால் போன்ற தலைவர்களால் இந்த இயக்கம் உருவாக்கப்பட்டு, படிப்படியாக வலுப்பெற்றது. சீனப் புரட்சியின் தலைவரான மாவோ சேதுங்கின் (Mao Zedong) கொள்கைகளை பின்பற்றக் கூடியவர்கள் என்பதால் மாவோயிஸ்டுகள் என்றும் அவர்கள் அழைக்கப்பட்டார்கள்.
ஆயுதப் புரட்சி மூலம் அதிகாரம்
ஜனநாயக அமைப்பிலான தேர்தல்கள், அரசு நிர்வாகங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் “ஆயுதப் புரட்சி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுதல்” என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டவர்கள் நக்சலைட்டுகள்.
பெருமுதலாளிகள் மற்றும் அரசுக்கு எதிராக ஏழை விவசாயிகள், பழங்குடி மக்களைத் திரட்டி ஆயுதப் போராட்டம் நடத்தியவர்கள் நக்சலைட்டுகள்.
நக்சல் பாதிப்பு மாநிலங்கள்
இந்தியாவில் 60 ஆண்டுகாலமாக இருந்த நக்சல் தீவிரவாதம் (Naxalism) முடிவுக்கு வந்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரகடனம் செய்து இருக்கிறார்.
இந்தியாவில் நக்சல் பாதிப்பு அதிகமாக இருந்த பகுதிகள் ‘சிவப்பு காரிடார்’ என்று அழைக்கப்பட்டன. ஆந்திரம், சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, பிகார், மேற்கு வங்கம் மற்றும் மகாராஷ்டிராவின் மலைப் பகுதிகள் இதில் அடங்கும்.
ஆயுத போராட்டத்தை ஒடுக்க பெரும் செலவு
நக்சலைட்டுகளை ஒடுக்க, அவர்களின் செயல்பாடுகளை முடக்க, மாநில அரசுகள் பெரும் நிதியை செலவிட்டு வந்தன. இவர்கள் ஆதிக்கம் செலுத்த பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் பெரும் சவாலாக இருந்தன.
பல மாநிலங்களில் மத்திய படைகளும் களமிறக்கப்படு பல ஆயிரம் கோடி ரூபாய் செலவானது. நக்சலைட்டுக்களுக்கு எதிரான போரில் பல நூறு வீரர்கள் தங்கள் உயிரை பறிகொடுத்தனர்.
மத்திய அரசு அறிக்கை
இந்தநிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மத்திய அரசு ஒரு ஆய்வறிக்கை வெளியிட்டு, நக்சலிசம் முடிவுக்கு வருவதாக தெரிவித்தது.
பாதிப்பு பெருமளவில் குறைந்தது
இந்தியாவில் நக்சல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களின் எண்ணிக்கை 2014ல் 126 ஆக இருந்த நிலையில், 2025-இல் அது வெறும் 11 மாவட்டங்களாகக் குறைந்தது.
மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் 36ல் இருந்து வெறும் 3 ஆகக் குறைந்தது. இதன் மூலம் நக்சலைட்டுகளின் “சிவப்பு காரிடார்” (Red Corridor) முற்றிலும் அழிந்தது
சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஒடிசா, மகாராஷ்டிரா, கேரளா, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பரவியிருந்த நக்சல் வன்முறைகள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டன.
உயிரிழப்புகள் குறைவு
வன்முறை சம்பவங்கள் 53%, படை வீரர்களின் உயிரிழப்பு 73% குறைந்து விட்டது. பொதுமக்கள் உயிரிழப்பும் 70% குறைந்து விட்டது.
உள்துறை அமைச்சர் அமித் ஷா
இந்தநிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜக்தல்பூரில், மத்திய ஆயுதக் காவல் படையினர், நக்சல் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து உரையாடினார்.
முடிவுக்கு வந்த நக்சலிசம்
”இந்தியா இப்போது நக்சல் வன்முறையிலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ளது என்று பெருமையுடன் அறிவித்த அமித் ஷா, 60 ஆண்டுகளாக ரத்தக்களரி, பின்தங்கிய நிலை,இளைஞர்களின் பாழான எதிர்காலம் ஆகிய இருண்ட காலம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.
சாதித்து காட்டிய படை வீரர்கள்
வாழ்நாளில் சாதிக்க முடியாது என்று கருதப்பட்ட ஒரு இலக்கை, பாதுகாப்புப் படையினரின் வீரத்தால் 4 ஆண்டுகளில் சாத்தியமாக்கினர்.
சேவை மையங்களாகும் படை முகாம்கள்
சத்தீஸ்கரில் உள்ள சுமார் 200 CAPF முகாம்களில், 70 முகாம்கள் சேவை முகாம்களாக மாற்றப்பட்டு, உள்ளூர் வளர்ச்சியில் அவை கவனம் செலுத்தும். இந்த மையங்கள் மூலம் 370 அரசு நலத்திட்டங்கள் ஆன்லைன் வாயிலாக மக்களுக்குக் கொண்டு சேர்க்கப்படும்.
மக்கள் சேவை மையங்கள்
மக்கள் சேவை மையங்களில் (Jan Seva Kendra) ரேஷன் கார்டுகள், அடையாள அட்டைகள் (ஆதார் கார்டு போன்றவை) தயாரித்தல், மானிய விலை தானியங்கள் கிடைக்காவிடில் புகார் அளித்தல், வங்கி கணக்குகளை இயக்குதல் போன்ற சேவைகள் வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு வழிகாட்டி
இவை பால் சேகரிப்பு மையங்களாகவும், விவசாய வழிகாட்டுதல், இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் முதியோர் கல்வி மையங்களாகவும் செயல்படும். தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் (NID) உதவியுடன் 3 மாதங்களில் இதற்கான முழு செயல்திட்டம் தயாரிக்கப்படும்.
3,000 நக்சல்கள் சரண்
சரணடைந்த சுமார் 3,000 நக்சல் இயக்க உறுப்பினர்களின் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக ஆரம்பக்கட்டமாக ₹20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ விரிவான மறுவாழ்வுத் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 60 ஆண்டுகளில் ஏற்பட்ட இழப்புகளை அடுத்த 5 ஆண்டுகளில் ஈடுசெய்து, நாட்டின் பிற பகுதிகளுக்கு இணையாக பஸ்தரை கொண்டு வர உள்துறை அமைச்சகம் துணை நிற்கும் என்று அமித் ஷா உறுதியளித்தார்.
============