

ரோபோக்கள் பயன்பாடு
AI-Powered Rail Robocop ASC Arjun in Vizag : நவீனத்துவத்திற்கு ஏற்ப, ரோபோக்கள் பயன்பாடு ஒவ்வொரு துறையிலும் அதிகரித்து வருகிறது. மருத்துவ துறையில் அறுவை சிகிச்சைகளை 100 சதவீதம் சிறப்பாக செய்ய ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொழிற்சாலைகள், வணிக வளாகங்களிலும் ரோபோக்கள் வந்து விட்டன.
ரயில் நிலையத்தில் ரோபோ காவலர்
இந்தநிலையில், இந்திய ரயில்வேயில் முதன்முறையாக ரோபோ காவலர்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனித உருவ ரோபோ, குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நடைமேடைகளில் கண்காணிப்பு
ஏஎஸ்சி அர்ஜுன் ‘ASC Arjun’ என்ற பெயர் கொண்ட இந்த ரோபோ, ரயில் நிலையத்தில் 8 நடைமேடைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.
நவீன கேமிராக்களுடன் கண்காணிப்பு
இந்த ரோபோ, தன்னாட்சியாக நடந்து சென்று கண்காணிப்பு பணிகளை மேற்கொள்கிறது. இதில் உள்ள 360 டிகிரி கேமராக்கள் நேரடி காட்சிகளை உடனுக்குடன் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்புகின்றன. அதுமட்டுமின்றி, காவல்துறை உங்கள் நண்பன் என்பது போல, பயணிகள் தங்களுக்குத் தேவையான தகவல்களை இதனிடமே கேட்டு பெறலாம்.
பயணிகளுக்கு உதவும் ரோபோ
பயணிகள் பாதுகாப்பு தொடர்பான அறிவிப்புகளை தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலத்தில் வழங்குவதால் ஒரு சக மனிதனை போல இதனுடன் கலந்துரையாடலாம்.
குற்றவாளிகளை அடையாளம் காண்கிறது
தேடப்படும் குற்றவாளிகள், காணாமல் போனவர்கள் மற்றும் சந்தேகத்திற்குரிய நபர்களை கண்டறிந்தால் அவர்களின் புகைப்படங்கள் இதன் தரவுத்தளத்தில் இருக்குமாயின், அவர்களைக் கண்டவுடன் ரயில்வே பாதுகாப்பு படைக்கு எச்சரிக்கை அனுப்பி விடுகிறது.
ரயில் பயணிகள் வரவேற்பு
ரயில் நிலையத்திற்குள் நுழையும் குற்றவாளிகள் இதனால், அடையாளம் காணப்பட்டு, போலீசாரால் சுற்றி வளைக்கப்படுகின்றனர். துல்லியமாக செயல்படும் ரோபோ காவலருக்கு பொதுமக்களிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது.
பயணிகளிடம் கிடைத்து வரும் வரவேற்பை தொடர்ந்து, மற்ற ரயில் நிலையங்களிலும் ரோபோ காவலர்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.
==================