

இந்தியாவின் சுவைமிக்க மாம்பழங்கள்
மாம்பழ விளைச்சலுக்கு பெயர் போனது இந்தியா. இங்கு பல வகையான சுவை மிக்க மாம்பழங்கள் விளைகின்றன. குறிப்பாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் கோடை காலத்தில் அதிக விளைச்சல் தரும் இந்த மாம்பழங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி
சிறப்பு வாய்ந்த சுவைமிக்க அல்போன்சா மற்றும் கேசர் வகை மாம்பழங்கள் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஜெர்மனிக்கு அதிக அளவில் ஏற்றுமதி ஆகின்றன.
பயணிகள் விமானத்தில் அனுப்பிவைப்பு
சீசன் காலத்தில் இவை ஏர் இந்தியா பயணிகள் விமானங்களில் அதிகளவில் அனுப்பி வைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு மார்ச் முதல் மே வரை மூன்று மாதங்களில், 1,000 டன்களுக்கும் அதிகமான மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
சுவை குறையாமல் பயணம்
சுவைமிக்க மாம்பழங்களை சரக்கு விமானங்களில் அனுப்பி வைத்தால், வெளிநாடுகளுக்கு காலதாமதமாக போய் சேர்வதோடு, அதன் சுவை குறைந்து விடும் என்பதால், ஏர் இந்தியா விமான நிறுவனம், பயணிகள் விமானங்களில் அனுப்பி வைக்கிறது.
பயணிகள் அமரும் பகுதியின் கீழ் உள்ள சரக்கு பகுதியில், 15° முதல் 20° சென்டி கிரேட் குளிர்சாதன வசதியுள்ள அறைகளில் பாதுகாப்பாக பெட்டிகளில் வைக்கப்பட்டு மாம்பழங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.
மாம்பழங்கள் மட்டுமல்லாமல் பல வகை காய்கறிகள், வேளாண் பொருட்களும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கடந்த மூன்று மாத காலத்தில் லண்டனுக்கு வாரத்திற்கு 180 டன் வரை காய்கறிகள், மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
அமெரிக்காவிற்கு 40 டன்களையும், துபாய்க்கு 30 டன்களும் ஒவ்வொரு வாரமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
டெல்லி, மும்பை, பெங்களூர் விமான நிலையங்களில் இருந்து அதிகளவிலான மாம்பழங்கள், வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானங்களில் அனுப்பி வைக்கப்படுகின்றன.
வெளிநாடு செல்லும் தமிழக மாம்பழங்கள்
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, ஆந்திரா மாநிலம் மற்றும் தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் உற்பத்தியாகும் உயர்ரக மாம்பழங்கள், சென்னையில் இருந்து இதைப்போல் விமானங்களில் வெளிநாட்டிற்கு அதிகளவில் அனுப்பப்பட்டு வந்தன.
பெங்களூருவில் இருந்து அனுப்பிவைப்பு
ஆந்திர மாநில மாம்பழம் ஏற்றுமதியாளர்கள், சென்னை விமான நிலையத்திற்கு மாம்பழங்களை ஏற்றுமதி செய்யக் கொண்டு வராமல், பெங்களூர் விமான நிலையத்திற்கு எடுத்து சென்று விடுவதாக கூறப்படுகிறது.
=======================